மும்பை: இந்தியவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஏர்டெல், தனது கிளை நிறுவனமான ஏர்டெல் எம் காமர்ஸ் சர்விசஸ் லிமிடெட் நிறுவனம் (Airtel M Commerce Services Ltd.) ரிசர்வ் வங்கியிடம் பேமெண்ட் வங்கி உரிமம் பெற்றுவதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இப்புதிய வங்கியில் கோட்டாக் மஹிந்திரா வங்கி 19.90 சதவீத பங்குகளை கொண்டு இருக்கும் என ரிசர்வ் வங்கிக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் எம் காமர்ஸ் சர்விசஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது ஏர்டெல் மனி (Airtel money) என்ற பெயரில் மொபைல் நிதி சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனம் கூறுகையில்," நிறுவனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஃப்ரிபெய்டு பேமெண்ட் உரிமத்தை பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ஆக மாற்றும் முயற்சியே" என தெரிவித்துள்ளது.
இத்தகைய உரிமத்தின் மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையான வங்கி சேவை அளித்திட முடியாது. வங்கிச் சேவைகளில் சிலவற்றை மட்டுமே அளிக்க முடியும்.
இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 215 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு தொலைதொடர்பு சேவை அளித்து வருகிறது.