மும்பை: ஆன்லைன் விற்பனை சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதல் முறையாக, நேரடி நிதியியல் முதலீடு செய்ய கூகிள் மற்றும் அலிபாபா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இகாமர்ஸ் சந்தையில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழும் அலிபாபா நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்திரமான கால்தடம் பதிக்க திட்டமிட்டு, ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்ய பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த முயற்சி மிகவும் ரகசியமாக செய்யப்பட்டு வருவதாகவும், இதுக்குறித்து உறுதியான செய்திகள் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் இப்பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ள பெயர் வெளியிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்.
1 பில்லியன் டாலர்
இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்துடன் போட்டிப்போட 1 பில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்னாப்டீல் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீடு பெற தயாராக உள்ளது.
சாப்ட்பாங்க்
கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் மோடியின் ஜாப்பான் பயணத்திற்கு பின் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் ஜப்பான் சாப்ட்பாங்க் நிறுவனம் சுமார் 627 மில்லியன் டாலர் முதலீடு செய்தது குறிப்பிடதக்கது. மேலும் இந்நிறுவனம் இந்தியாவின் அன்லைன் வர்த்தகம் மற்றும் தொலைதொடர்பு துறையில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டள்ளது.
கூகிள்
மேலும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் மொபைல் விளம்பரத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் கூகிள் நிறுவனம் இந்தியாவில் ஸ்னாப்டீல் நிறுவனம் மற்றும் இன்மொபி நிறுவனத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இன்மொபி
மொபைல் விளம்பர நிறுவனமான இன்மொபி (InMobi) நிறுவனத்தை உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் கூகிள் நிறுவனம் கைபற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் இப்பேச்சுவார்த்தை மிகவும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் இதுக்குறித்து இரு நிறுவனங்களும் எந்த விதமான கருத்துக்களை வெளியிடவில்லை.
ஸ்னாப்டீல்
மேலும் ஸ்னாப்டீல் நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இந்நிறுவனம் மொபைல் ரீசார்ஜ் நிறுவனமான freecharge என்னும் நிறுவனத்தை 450 மில்லியன் டாலர் அதாவது 2800 கோடி ரூபாய்க்கு கைபற்ற திட்டமிட்டுள்ளது.
மிகப்பெரிய ஒப்பந்தம்
இன்றைய நிலையில் இகாமர்ஸ் தளத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் மின்திரா நிறுவனத்தை 370 மில்லியன் டாலருக்கும் கைபற்றியது தான் மிகப்பெற்றிய ஒப்பந்தமாக கருதப்படும் நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் இந்த முயற்சி ஆன்லைன் வர்த்தக தளத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும், போட்டியை அதிகரிக்கும்.