டெல்லி: உள்நாட்டு விமான போக்குவரத்தில் அதிக சந்தை மதிப்புடைய இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை இந்நிறுவனம் வேகமாக செயல்படுத்தி வருகிறது.
இண்டிகோ நிறுவனம் 2015-16ஆம் நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் மாதத்திற்குள் பங்குசந்தையில் சுமார் 2,500 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
ரூ.2,220 கோடி லாபம்
நடப்பு நிதியாண்டில் விமான எரிபொருள் விலை குறைந்ததால் இந்திய விமான நிறுவனங்கள் அதிகளவிலான லாபம் அடைந்தது. இதன் மூலம் 2014-15ஆம் ஆண்டில், இண்டிகோ நிறுவனம் ரூ.2,220 கோடி லாபத்தை அடைய முடியும் என இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகுல் பாட்டியா தெரிவித்தார்.
இண்டிகோ
இதுகுறித்து இந்நிறுவனத்திடம் கேட்டபோது எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. எனினும் இந்நிறுவனத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, பங்குச்சந்தையில் இறங்குவதற்காக முழுவீச்சில் செயல்படுவதாக தகவல் கிடைத்தது.
4வது நிறுவனம்
இன்றைய நிலையில், பங்குச் சந்தையில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள் மட்டுமே பட்டியலிட்டுள்ளன.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனம் பங்குச் சந்தையில் இருந்தாலும் சில சட்டரீதியிலான பிரச்சனைகள் காரணமாக இந்நிறுவனத்தின் மீதான வர்த்தகம் முடக்கப்பட்டுள்ளது. தற்போது இண்டிகோ 4வது நிறுவனமாக களத்தில் குதிக்கிறது.
விரிவாக்க திட்டம்
இண்டிகோ நிறுவனம் தனது விமான எண்ணிக்கையை உயர்ந்தவும், புதிகாக 530 ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களை வாங்க திட்டமிட்டு பங்குச்சந்தையில் இறங்குகிறது.
லாபகரமான நிறுவனம்
இந்தியாவில் ஐெட் ஏர்வேஸ், ஸ்பைஸ்ஜெட் போன்ற முன்னணி நிறுவனங்களும் நிதிநிலையை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தாலும், இண்டிகோ நிறுவனம் தொடர் லாபத்திலேயே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.