டெல்லி: 2015ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.8 சதவீதத்தை எட்டி சீனாவை பின்னுக்கு தள்ளும் என ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆணித்தரமாக சொல்கிறது.
2016-17ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 8.2 சதவீதமாக உயரும் எனவும் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி
மத்திய அரசின் புதிய சீர்திருத்த மற்றும் வளர்ச்சி திட்டங்கள் சர்வதேச நாடுகளின் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதனால் அன்னிய முதலீடு உயர்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ள நிலையில் இந்தியா குறைந்த காலகட்டத்தில் வேகமான வளர்ச்சியை அடையும் என ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது.
சீனாவின் வளர்ச்சி
2015-16ஆம் நிதியாண்டில் சீனா 7.2 சதவீத வளர்ச்சியையும், 2016-17ஆம் நிதியாண்டில் 7 சதவீத வளர்ச்சியையும் அடையும் என ஆசிய வளர்ச்சி வங்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்கா உடன் போட்டி
கடந்த 10 வருடத்தில் சீனாவின் வளர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தைக் பெற்றுள்ளது, இதன் விளைவாக வல்லரசு நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவிற்கு அடுத்ததாக சீனா இடம்பெற்றுள்ளது.
சரிவு பாதை
கடந்த ஆண்டு கட்டுமானத் துறையில் ஏற்பட்ட சரிவு மற்றும் அன்னிய முதலீட்டு அளவில் குறைவு ஆகியவற்றால் சீனாவின் வளர்ச்சி அதிகளவில் பாதித்துள்ளது.
தடைகள்
அரசின் முதலீட்டுக் கொள்கை, நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை சீனாவின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாக உள்ளது என ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார அதிகாரியான ஷாங் ஜின் வெய் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சீனாவின் வளர்ச்சி பாதையில் பல தடைகள் இருந்தாலும் அரசின் ஸ்திரத்தன்மை சிறப்பாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம்
வளர்ச்சி குறித்த மத்திய அரசின் கணிப்பான 8 - 8.5 சதவீதத்தை விட குறைவாகத்தான் ஆசிய வங்கியின் கணிப்பு உள்ளது. ஆனாலும் இது சர்வதேச நாணய நிதியத்தை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.