டெல்லி: ஊழல் வழக்கில் சிக்கிய சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் உட்பட மூன்று தலைவர்களுக்கு ஜாமீன் பெற 90 நாட்கள் கால நீட்டிப்பு செய்து தீர்ப்பு அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
சஹாரா நிறுவனத்தின் மீது சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தொடுத்த 24,000 கோடி ஊழல் வழக்கின் விசாரணையில் சஹாரா நிறுவனத்திற்கு நீதிபதி தாகூர், தேவ், ஷிக்கரி ஆகியோர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கடைசி வாய்ப்பு அளித்துள்ளது.
இன்னும் 90 நாட்களில் இந்நிறுவனம் தனது சொத்துக்களை விற்று ரூ.5000 கோடி நிதி திரட்ட வேண்டும் இல்லை என்றால் கோவிந்தா கோவிந்தா தான்.
கடைசி வாய்ப்பு
முன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சஹாரா நிறுவனத்திடம், "இந்த 90 நாட்கள் சஹாரா நிறுவனத்திற்கு அளிக்கப்படும் கடைசி வாய்ப்பாகும், இதை தவறவிட்டால் நீதிமன்றம் நிறுவன சொத்துக்களை விற்க தனி குழுவை உடனடியாக அமைத்துவிடும்," என எச்சரித்துள்ளது.
வழக்கு
சஹாரா குழுமத்தின் 2 நிறுவனங்கள் தனது முதலீட்டாளர்களுக்கு ஈவுத் தொகையாக அளிக்க வேண்டிய 24,000 கோடி ரூபாய் தொகையை செலுத்தத் தவறியதால், செபி இந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்தது.
இவ்வழக்கு சஹாரா நிறுவனத்திற்கு எதிராக அமைந்ததால், இந்நிறுவன தலைவரான சுப்ரதா ராய் அவர்களை கைது செய்ய ஆகஸ்ட் 31, 2012ஆம் வருடம் உச்ச நீதிமன்றம் பிடிவாரன்ட் அளித்தது.
மார்ச் 4
18 மாத ஒளிவு மறைவு ஆட்டத்திற்கு பிறகு மறைந்திருக்க இடமின்றி மார்ச் 4ஆம் தேதி தானாக வந்து சரணடைந்தார். இதனை அடுத்து சுப்ரதா ராய், ரவி சங்கர் துபே மற்றும் அசோக் ராய் சவுத்ரி ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜாமீன்
இவ்வழக்கின் விசாரணையில் சுப்ரதா ராய்க்கு மார்ச் 26, 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளிக்க உத்தரவிட்டது. இந்த ஜாமீன் பெற நீதிமன்றம் வைத்த கிடுக்கிப்பிடியில்தான் சஹாரா நிறுவனம் சிக்கித் தவித்து வருகிறது.
செக் வைத்த சுப்ரீம் கோர்ட்
மூவரும் ஜாமீன் பெற, சஹாரா நிறுவனம் செபியிடம் டெபாசிட் தொகையாக ரூ.5,000 கோடியும், ரூ.5,000 கோடி வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை வைத்தது.
நிதி திரட்டுதல்
இத்தொகையை திரட்ட சஹாரா நிறுவனம் தனது சொத்துக்களை விற்கத் திட்டமிட்ட போது, அனைவரும் அடி மாட்டு விலைக்குக் கேட்பதால் விற்க முடியாமல் தவிக்கிறது. சில சொத்துக்களின் மீது சட்ட சிக்கல் உள்ளதால் அவற்றை விற்க முடியாத நிலை.
90 நாட்கள்
இந்த 90 நாட்களில் சஹாரா நிறுவனம் 10,000 கோடி ரூபாய்க்கான நிதி உத்திரவாதம் அளிக்க வேண்டும் இல்லையெனில் நீதிமன்றம் இந்நிறுவன சொத்துக்களை ஏலம் விட்டுவிடும்.