ஹைதராபாத்: கேஎஃப்சி மற்றும் மெக் டொனால்டு போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடி தரும் வகையில் 500 மில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்ய பைவ் ஸ்டார் சிக்கன் முடிவு செய்துள்ளது.
கடந்த 10 வருடங்களில் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் பல இந்தியாவில் கடைவிரித்து, ஏகப்பட்ட வாடிக்கையாளர்களை மடக்கி வைத்துள்ளன. இவற்றில் கேஎஃப்சி மற்றும் மெக் டொனால்டு நிறுவனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
இவ்விரு நிறுவனங்களுக்கும் போட்டியாக இந்தியாவிற்குள் நுழைந்த பைவ் ஸ்டார் சிக்கன், இப்போது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றது.
பைவ் ஸ்டார் சிக்கன்
இந்தியாவில் சிறு மற்றும் குறு கடைகளாகத் துவங்கப்பட்ட தாய்லாந்து நாட்டை சேர்ந்த பைவ் ஸ்டார் சிக்கன் நிறுவனம் (CP Foods), கேஎஃப்சி, மெக்டொனால்டு போன்ற நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க 3,100 கோடி ரூபாய் (500 மில்லியன் டாலர்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
சி.பி குரூப்
தாய்லாந்து நாட்டின் முன்னணி தனியார் நிறுவனமான சிபி குரூப் நிறுவனத்தின் கிளை நிறுவனாமான சிபி புட்ஸ் (Charoen Pokphand Foods) இந்திய பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுச் சந்தையில் அதிகளவிலான வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
இக்குழுமத்தின் மொத்த விற்பனை அளவான 45 பில்லியன் டாலரில் 5 சதவீதம் இந்தியச் சந்தையில் கிடைத்தது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 மடங்கு வளர்ச்சி
அடுத்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் 3 மடங்கு உயர்வை பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்திய சந்தையில் ரூ.3,000 கோடி முதலீடு செய்ய CP Foods நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
260 கிளைகள்
இந்தியாவில் பெங்களுரூ, சென்னை, கோயம்புத்தூர், மைசூரூ, கொச்சி, சேலம், கோழிக்கோடு, கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் சுமார் 260 கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது பைவ் ஸ்டார்.
வருமானம்
பைவ் ஸ்டார் சிக்கன் நிறுவனம் வருடத்திற்கு 600 மில்லியன் டாலர், அதாவது 3,720 கோடி ரூபாய் வருமானமும் 10-15 சதவீத வருடாந்திர வளர்ச்சியையும் பெற்று வருகிறது.
இந்திய கடைகள்
இத்தகைய கடைகள் வருகையால் மாயாபஜார், முனியாண்டி விலாஸ் போன்ற பாரம்பரிய கடைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. குறிப்பாக இளைஞர்கள் இந்த மாதிரி 'தேசி' உணவகங்களை கண்டுகொள்வதே இல்லை!