டெல்லி: கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்திய சந்தையில் 1,000 கோடி ரூபாய் மதிப்பிற்கும் அதிகமான தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தங்க இறக்குமதி மீது அதிகமான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகம் அதிகளவில் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து நாட்டில் தங்க கடத்தல் அதிகரித்தது.
3,500 கிலோ தங்கம்
2014-15ஆம் ஆண்டுக் காலத்தில் சுங்க அதிகாரிகள், காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சுமார் 3,500 கிலோ கடத்தல் செய்யப்பட்டத் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இது பிடிக்கப்பட்ட தங்கம் மட்டுமே என்பதால், கல்லச் சந்தையில் அதிகளவிலான கடத்தல் தங்கம் புழக்கத்தில் இருப்பது உறுதி.
தங்க கடத்தல் 900% உயர்வு
கடந்த இரண்டு ஆண்டுகளில், தங்க இறக்குமதிக்கான கட்டணங்கள் 10 சதவீதம் அதிகரித்தை தொடர்ந்து இந்தியாவில் தங்கம் கடத்தல் 900% அதிகரித்துள்ளது.
மீட்கப்பட்ட தங்கம் வெறும் 10%
மேலும் சுங்கத்துறை கூறுகையில் கடந்த ஒரு வருடத்தில் கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் அளவு 3500 கிலோ என்றாலும் இது வெறும் 10 சதவீதம் மட்டுமே என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் பல வழிகளில் தங்கம் கடத்தப்பட்டுள்ளது, இத்தகைய புதிய வழிகளை ஆய்வு செய்து அதனை உடனடியாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருவதாக இத்துறை தெரிவித்துள்ளது.
வழித் தடங்கள்
துபாய், தாய்லாந்து மற்றும் சீனாவில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் தங்கம் இந்தியாவிற்குள் நேரடியாகக் கொண்டு வர இயலாத நிலையில் உள்ளபோது, அவை அனைத்தும் நேபாளில் இறக்குமதி செய்யப்பட்டு அதைப் பல திருட்டு வழிகளில் இந்தியாவிற்குள் வருகிறது.
நிலநடுக்கம்
நேபாளத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தால், இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி கடத்தல்கள் அதிகளவில் குறைந்துள்ளது.
வழக்குகள்
2014-15ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் தங்க கடத்தலுக்காக சுமார் 4,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.