மும்பை: நாட்டின் முன்னணி தனியார் துறை விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், புதிய பயணிகளைக் கவர 10 லட்சம் டிக்கெட்களை 25 சதவீத சலுகை விலையில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோ ஏர் ஆகியவை அதிகளவிலான சலுகை ஏதும் அளிக்காத காரணத்தினால் விமானப் பயணிகளின் பார்வை தற்போது ஜெட் ஏர்வேஸ் மீது திரும்பியுள்ளது.
உள்ளாட்டு சேவை
இந்த 25 சதவீத சலுகை சேவை உள்நாட்டு விமானப் பயணத்தில் மட்டுமே கிடைக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸின் உள்நாட்டு விமான இயக்கங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
4 நாள் மட்டுமே இந்த ஆஃப்
இப்புதிய சலுகையின் கீழ் டிக்கெட் விற்பனை புதன்கிழமை துவங்கி வரும் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பயண நாள்
இச்சலுகையில் புக் செய்யப்படும் டிக்கெட்களின் பயணம் அனைத்தும் ஜுன் 15 முதல் அக்டோபர் 15ஆம் வரையில் இருக்கும் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. மேலும் இச்சலுகையின் கீழ் குரூப் புக்கிங் கிடையாது என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது.
எதிஹாத்
இந்திய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது, இந்நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் தனது பங்குகள் வங்கிகளில் அடமானம் வைக்கத் துவங்கினார்.
அதன் பின் இந்நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை எதிஹாத் நிறுவனம் கைப்பற்றிய பின் ஜெட் ஏர்வேஸ் பல புதிய மாற்றங்களைச் செய்தது.
கார்கோ சர்வீஸ்
இந்தியாவில் விமானச் சரக்குப் போக்குவரத்தில் மிகப்பெரிய சந்தை இல்லை என்றாலும், எதிஹாத் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு ஒரு விமானத்தை வாங்கிப் பாஸ்ட் டிராக் என்னும் சரக்குப் போக்குவரத்தை சேவையைத் துவங்கியுள்ளது.