பெங்களூரு: சமீபத்தில் சென்னை டி-நகர் பகுதியில் மிகவும் பரபரப்புடன் புதிய கிளையைத் திறந்த கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இந்தியா மற்றும் மேற்கு ஆசிய பகுதியில் மேலும் 22 நகை கடை ஷோரூம்களைத் திறக்க சுமார் 800 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
புவனேஸ்வரில் புதிய கிளை
கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தற்போது ஒடிஷா மாநில தலைநகரான புவனேஸ்வர் பகுதியில் புதிய கிளையைத் துவங்கியுள்ளது. இதன் மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸ் கிழக்கு இந்திய பகுதியில் முதல் முறையாகக் கால் தடம் பதித்துள்ளது.
200 கோடி வர்த்தகம்
இக்கிளையில் மூலம் இவ்வருடம் சுமார் 200 கோடி ரூபாய் வர்த்தகத்தை எதிர்பார்த்து தனது நிறுவன கிளையை இப்பகுதியில் விரிவாக்கம் செய்துள்ளதாகக் கல்யாண் ஜூவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.
டி.எஸ். கல்யாணராமன்
இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான டி.எஸ். கல்யாணராமன் கூறுகையில், நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியா மட்டும் அல்லாமல் மேற்கு ஆசியாவிலும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறோம். மேலும் இதற்கான முதலீடு அளவையும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.
22 கிளைகள்
மேலும் இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவில் சுமார் 22 கிளைகளைத் திறக்க நிறுவனம் சுமார் 800 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம் எனவும் கல்யாணராமன் தெரிவித்தார்.