மும்பை: இந்தியாவிலேயே அதிகக் கிளைகளுடன் நிதி சேவை அளிக்கும் தபால் துறை, 5 லட்ச சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு வழங்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் இருக்கும் முக்கியத் தபால் நிலையங்களில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவிய தபால் துறை, தற்போது டெபிட் கார்டு சேவையை வழங்கி வருகிறது.
5 லட்சம் டெபிட் கார்டுகள்
தபால் துறையின் 5 லட்சம் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும் டெபிட் கார்டு பணிகள் அடுத்த 2 மாத்தில் முற்றிலும் முடிவடையும் என இந்திய தபால் துறையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பைலட் திட்டம்
டெபிட் கார்டு விநியோகம் செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாகவே செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரக் கணக்கின் படி 10,000 கணக்காளர்களுக்கு அளிக்கப்பட்டதாகத் தபால் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இது சேதனை திட்டமாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டச் செயல்பாட்டில் உள்ள பிரச்சனைகளைக் களைந்த பின் அனைவருக்கும் டெபிட் கார்டு சேவை அளிக்கத் தபால் துறை உறுதி அளித்துள்ளது.
2,600 கிளைகள்
தற்போது இந்த டெபிட் கார்டுகள் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட 2,600 தபால் நிலையங்களில் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இக்கிளைகளில் ஏற்கனவே வங்கிகளில் கொடுக்கப்படும் சேவைகள் அனைத்து வழங்கப்பட்டு வருகிறது.
தடைகள்
டெபிட் கார்டு பெறும் வாடிக்கையாளர்கள் தபால் துறை நிறுவியுள்ள 115 ஏடிஎம் இயந்திரத்தில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுவே இத்திட்டத்தின் தடையாக உள்ளது.
கூடிய விரைவில் இத்தடையும் நீக்க தபால் துறை திட்டமிட்டு வருகிறது.
10,000 ஏடிஎம் இயந்திரங்கள்
மேலும் மார்ச் மாத இறுதிக்குள் சுமார் 10,000 ஏடிஎம் இயந்திரத்தை நிறுவ தபால் துறை திட்டமிட்டுள்ளது. அதேபோல் 25,000 கிளைகளில் core banking solution எனப்படும் வங்கிச் சேவையை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
30 கோடி ரூபாய்
சமீபத்தில் இந்திய தபால் துறை 30 கோடி ரூபாய் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய நிதி மேம்பாடு மற்றும் பரிவர்த்தனை சேவையைத் துவங்க உள்ளது. அதேபோல் சுமார் 1.5 கோடி ரூபே டெபிட் கார்டுகளையும் பெற உள்ளது.
ஈகாமர்ஸ்
தபால் துறை வங்கி சேவை மட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் துறையிலும் இறங்கியுள்ளது. பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான், ஈபே போன்ற நிறுவனங்களுக்கு விநியோக சேவையை வழங்கி வருகிறது.