மும்பை: இந்தியாவில் மலிவான செலவில் சிறந்த நிதி சேவை வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நாடு முழுவதும் நிதிச் சேவை குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில் 50 சிறந்த மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டது. இதில் 45 மாவட்டங்கள் தென் இந்தியாவிலும், 30 மாவட்டங்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இடம்பெற்றுள்ளதாகக் கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாப் 5 மாநிலங்கள்
கிரிசில் அமைப்பு செய்த ஆய்வின் படி இந்தியாவில் மக்களுக்கு ஏற்ற வகையில் குறைவான செலவுகளுடன் சிறந்த நிதிச்சேவை அளிக்கும் மாநிலங்களில் புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு, கோவா மற்றும் சண்டிகார் ஆகியவை டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது.
நிதி சேர்க்கை குறியீடு
புதுச்சேரி, கேரளா, தமிழ்நாடு, ஆகிய மூன்று மாநிலங்களும் 2013ஆம் ஆண்டில் நிதி சேர்க்கை குறியீட்டில் 50.1 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
2012ஆம் ஆண்டில் இதன் அளவு 42.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜன் தண் யோஜனா
இந்த ஆய்வில் ஜன் தண் யோஜனா திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட கணக்குகளைச் சேர்க்கவில்லை எனக் கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
140 மில்லியன் கணக்குகள்
கடந்த ஆகஸ்ட் 2014ஆம் ஆண்டு முதல் ஜன் தண் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 140 மில்லியன் வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2015ஆம் ஆண்டில் நிதி சேர்க்கை குறியீடு புதிய உச்சத்தை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
நிதி சேவை
கிரிசில் ஆய்வு அமைப்புச் செய்யப்பட்ட ஆய்வில் கடன், வைப்பு, இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் சேவை ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
652 மாவட்டங்கள்
இந்தியாவில் உள்ள 35 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 652 மாவட்டங்கள் வாரியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.