டெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையில் 2014-15ஆம் ஆண்டில் எப்போதும் இல்லாத அளவிற்கு 10 மடங்கு அதிகப்படியான அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு துறையில் 6,473.22 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் இத்துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசு, உள்நாட்டு முதலீடு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதிகளவிலான ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 3 நிதியாண்டுகளில் இத்துறை 8,375 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது. அதில் 2014-15ஆம் நிதியாண்டில் மட்டும் 6,473.22 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 2013-14ஆம் நிதியாண்டில் இதன் அளவு வெறும் 687.39 கோடி ரூபாய் மட்டுமே.
இந்நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாதங்களில் இத்துறை வெறும் 31.25 கோடி ரூபாய் மட்டும் அன்னிய முதலீடாகப் பெற்றுள்ளது.
இத்துறையில் ஆய்வு மற்றும் உற்பத்திக்கு மத்திய அரசு 100 சதவீத அன்னிய முதலீட்டை ஒப்புதல் அளித்துள்ளது, இதனால் இப்பிரிவில் அதிகளவிலான முதலீட்டுச் செய்யப்படுகிறது.