டெல்லி: சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை சரிவு, தங்கத்தின் மீதான முதலீட்டுக் குறைவு மற்றும் இந்திய சந்தையில் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் சிறப்பாக உள்ளதால் கடந்த ஐந்து வர்த்தக நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் சுமார் 2,200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
ஆனால் ஏப்ரல் - மே மாத காலகட்டத்தில் அதிக அன்னிய முதலீட்டை ஈர்க்கும் சேவைத்துறையில் முதலீட்டு அளவு 15 சதவீதம் குறைந்துள்ளது.
சேவைத்துறையில் வங்கியியல், இன்சூரன்ஸ், அவுட்சோர்சிங், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, கூரியர் மற்றும் தொழில்நுட்ப சோதனை ஆகியவை அடக்கும். இக்காலகட்டத்தில் 488 மில்லியன் டாலர் மட்டும் அன்னிய முதலீடாகக் கிடைத்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு 574 மில்லியன் டாலராக இருந்தது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்கு மட்டும் 60 சதவீதம். 2013-14ஆம் நிதியாண்டில் இத்துறையில் மொத்த அன்னிய முதலீட்டின் அளவு 3.25 பில்லியன் டாலராக உள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் மே மாத காலகட்டத்தில் அன்னிய முதலீட்டு அளவு 40 சதவீதம் அதிகரித்து 7.45 பில்லியன் டாலராக உள்ளது.
மத்திய அரசின் கணக்கின் படி அடுத்த 5 வருடத்தில் இந்திய சந்தைக்கு 1 டிரில்லியன் டாலர் அன்னிய முதலீடு தேவைப்படுகிறது.