டெல்லி: இந்திய வங்கிகளின் கல்வி கடன் குறித்த தகவல்கள் இணைக்கப்பட்ட பிரத்தியேக இணையத் தளத்தை மத்திய அரசு இன்று துவங்கி வைத்துள்ளது. முதற்கட்டமாக இத்தளத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா உட்பட் சில வங்கிகளின் தகவல் இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக அனைத்துப் பொதுத் துறை வங்கிகளும் இதனுள் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பின் தனியார் வங்கிகளையும், வித்யாலக்ஷமி.கோ.இன் தளத்தில் இணைக்கப்பட உள்ளது.
இத்தகைய தளம் கல்விக்கடன் அதன் குறித்த தகவல்களைச் சேகரிக்க முடியாமல் தவிக்கும் கிராம மற்றும் நகரப்புற மாணவ மாணவியர்களுக்கு அதிகளவில் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய இளைஞர்களுக்குச் சிறந்த கல்வியைக் கொண்டு சேர்க்கும் விதமாக மத்திய அரசு துவங்கியுள்ளதாக நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இணையதளத்தில் மத்திய அரசின் Pradhan Mantri Vidya Lakshmi Karyakram (PMVLK) திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உதவித்தொகை குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது 2015-16ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையிலேயே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.