டெல்லி: ஜூலை மாதத்தில் இந்திய சந்தையில் உற்பத்தி, மூலதன சரக்குத் துறை மற்றும் தொழிற்துறை உற்பத்தி ஆகியவை 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இதன் அளவு வெறும் 0.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இந்தியாவின் தொழிற்துறை உற்பத்திக் குறியீடு வெளியிடப்பட்டது, சந்தைக் கணிப்புகளின் படி இதன் அளவு 4.36 சதவீதமாகக் கணிக்கப்பட்ட நிலையில் 4.2 சதவீதமாகப் பதிவாகி சந்தையை ஏமாற்றியது.
நாட்டின் ஜிடிபி குறியீட்டுக்கு இணையாக இந்திய ஐஐபி குறியீடு உள்ளது, மேலும் மூலதன சரக்கு மற்றும் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது எனப் பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் - ஜூலை மாதங்களில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 3.5 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் இதன் அளவு 3.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.