மும்பை: கடந்த ஒரு வருட காலத்தில் ரிசர்வ் வங்கி 2 முழு வங்கிகளுக்கும், 11 பேமெண்டு வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது சிறு வங்கிகளை அமைக்க இந்தியாவில் 10 நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் சிறு வங்கிகளை அமைக்கச் சுமார் 72 நிதி மற்றும் நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது. இதில் ஆர்பிஐயின் தீவிர ஆய்விற்குப் பின் 10 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி ஏயு பைனான்சியர், கேப்பிடல் லோக்கல் ஏரியா பாங்க், திசா மைக்ரோபின் பிரைவேட் லிமிடெட், ஈகுவிடாஸ் ஹோல்டிங்ஸ், ஈஎஸ்ஏஎப் மைக்ரோ பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஜனலக்ஷமி பைனான்சியல் சர்விசஸ், யுஜிவன் பைனான்சியல் சர்வீசஸ், ஆர்ஜிவிஎன் மைக்ரோபைனான்ஸ், சூரியோதைய மைக்ரோ பைனான்ஸ் மற்றும் உட்கராஷ் மைக்ரோ பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் சிறு வங்கிகளை அமைக்க அனுமதி அளித்துள்ளது.
சிறு வங்கிகளை அமைக்கும் முயற்சியில் DHFL, ஐஐஎப்எல் ஹோல்டிங்ஸ், எஸ்கேஎஸ் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் யுஏசி எக்ஸ்சேஞ்ச் அண்ட் பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் தோற்றுப்போனது.
அதேபோல் சிறு வங்கிகளை அமைக்க ஏர்டெல் மணி நிறுவனத்தின் மனிஷ் கீரா மற்றும் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான வி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும் அனுமதி கிடைக்கவில்லை.