மும்பை: கடந்த 5 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அதானி குழுமம் திட்டமிட்டு வருகிறது.
இத்திட்டத்திற்குக் கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்த ஆஸ்திரேலியா அரசு. இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் சுற்றுப்புற சூழல் அதிகளவில் மாசுபாடும் என அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதனால் நீதிமன்றம் இத்திட்டத்திற்குத் தற்காலிக தடையை அறிவித்தது.
ஒப்புதல்
தற்போது சுற்றுப்புற துறையின் ஒப்புதல்களோடு சுமார் 59 கட்டுப்பாடு மற்றும் நிபந்தனைகளுடன் ஆஸ்திரேலியா அரசு அதானி குழுமத்தின் நிலக்கரி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
16 பில்லியன் டாலர்
ஆஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கார்மைக்கில் நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 16 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய அதானி குழுமத்தின் அஸ்திரேலிய கிளை நிறுவனமான அதானி மைனிங் பிடிஓய் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.
ரயில் பாதை...
இத்திட்ட ஒப்புதல்களில் சுரங்கத்தில் இருந்து நேரடியாகத் துறைமுகத்திற்கு நிலக்கரியைக் கொண்டு வரத் தனி ரயிவ் பாதை அமைக்கும் திட்டமும் அடங்கும். இப்புதிய வழித்தடத்தின் மூலம் அப்பாட் துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி ஏற்றுமதி செய்ப்பட உள்ளது.
40 மில்லியன் டன் நிலக்கரி..
வியாழக்கிழமை ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கெரெக் ஹன்ட், கார்மைக்கில் நிலக்கரி சுரங்கத்திற்கும், கைலிலீ ரயில் பாதைக்கும் இறுதிக்கட்ட ஒப்புதல்களை அளித்தார்.
இதன் மூலம் வருடத்திற்குச் சுமார் 40 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ள அதானி குழுமம். இது வெறும் முதல்கட்ட திட்டம் தான் என்றும் கூறியுள்ளது.
59 நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகள்
ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள 59 நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகள் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், மக்கள் நலன் திட்டங்களில் முதலீடு எனப் பல அடங்கும்.
இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் 22 பில்லியன் டாலர் வரி மற்றும் லாபத்தில் பெரும் பகுதியை அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போ என்ன பிரச்சனை
திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், ஆதானி நிறுவனத்திற்கு நிதியுதவி செய்யப் பிரன்ஞ், ஜெர்மன் வங்கிகள் பின்வாங்கியுள்ளது. அதேபோல் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் மற்றும் காமென்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா வங்கிகளும் நிதியுதவி அளிக்க மறுத்துள்ளது.
இந்நிலையில் சந்தையில் நிலக்கரியின் விலை அதிகளவில் குறைந்துள்ளது, இதனால் பல சுரங்க நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை முடக்கியுள்ளனர்.
ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர்
128 வருடப் பழமையான ரசில் வேலி காலினரி சுரங்க நிர்வாகத்தில் பெரும் பங்குகள் கைபற்றிய ஜின்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனமும் நிலக்கரியின் விலை சரிவால் தனது பணிகளை முடக்கியுள்ளது.