டெல்லி: இந்திய சந்தையில் ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலைக் குறைவான கோதுமையைத் தடுக்க, மத்திய அரசு கோதுமை மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த வரி உயர்வு வருகிற மார்ச் 31, 2016ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பருப்பு விலை உயர்ந்ததின் எதிரொலியாகக் கோதுமை இறக்குமதியைத் தடுக்க வரி உயர்வு நடவடிக்கையை அமல்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் கோதுமை விலை மிகவும் குறைவாக உள்ளது. இதனால், உள்நாட்டில் கோதுமை விளைச்சல் போதுமானதாக இருந்தாலும், தரமான கோதுமை தேவையைக் காரணம் காட்டி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் உள்ளூர் கோதுமை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், கோதுமை மீதான இறக்குமதி வரியை ஏற்கெனவே இருந்த 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வரி உயர்வு நடப்பு நிதியாண்டு முழுவதும் அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.