வாஷிங்டன்: உலக நாடுகளில் வர்த்தகம் செய்ய ஏதுவான 189 நாடுகளின் பட்டியலை உலக வங்கி பல கட்ட ஆய்வுகளுக்குப் பின் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் இந்தியா கடந்த வருடத்தை விட 12 இடங்கள் முன்னேறி 130வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடத்தைப் போலவே 2015ஆம் வருடமும் சிங்கப்பூர் உலக வங்கி வெளியிட்டுள்ள இப்பட்டியலில் முதல் இடத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
சிங்கப்பூர்
உலகப் பல வல்லரசு நாடுகள் இருந்த போதிலும் எளிமையான வர்த்தக நடைமுறை மற்றும் அனைத்து நாட்டவருக்கும் ஏதுவான சந்தை எனப் பல காரணிகளில், முன்னணி நாட்டுகளை ஓரம் கட்டி சிங்கப்பூர் உலக வங்கி வெளியிட்ட 189 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
மாற்றங்கள் மிகவும் குறைவு..
வர்த்தகம் செய்ய ஏதுவான சூழல்கள் அமைந்துள்ள நாடுகள் பட்டியலை வெளியிட்ட உலக வங்கி, கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் பட்டியலில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
டாப் 10 இடங்கள்
சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்த நிலையில், நியூசிலாந்து 2வது இடத்தைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து டென்மார்க், தென் கொரியா, ஹாங்காங், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
13வது வருடம்
இந்த ஆய்வை உலக வங்கி கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எப்படி ஒரு நாட்டில் வர்த்தகத்தைத் துவங்கி அதனை விரிவாக்கம் செய்கிறது என்பதை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடந்தப்படுகிறது. இதில் அரசின் வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மிக முக்கியக் காரணிகளாகக் கருதப்படுகிறது.
இந்தியா
கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் 2 முக்கிய திட்ட அமலாக்கத்தின் மூலம் இந்தியா 12 இடங்கள் முன்னேறி தற்போது 130வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த உயர்விற்கு மேக் இன் இந்தியா திட்டமும், பல துறைகளில் அன்னிய முதலீட்டு அளவுகளின் தளர்வுகள் முக்கிய காரணிகளாக அமைந்தது.