டெல்லி: இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக இயங்கி வரும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் அளவிற்கு அதிகமாக லெட் மற்றும் எம்எஸ்ஜி இருந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இதன் தயாரிப்பு மற்றும் உற்பத்திக்குத் தடை விதித்தது.
இந்நிலையில் நெஸ்லே நிறுவனத்தின் மேல் முறையீடு செய்து புதிய தயாரிப்புகளை மும்பை நீதிமன்ற உத்தரவுப் படி ஆய்வு செய்யப்பட்டது.
நெஸ்லே நிறுவனத்தின் புதிய தயாரிப்பில் எவ்விதமான ஆபத்துக் காரணிகள் இல்லை என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
மேகி நூடுல்ஸ் தயாரிப்புத் துவக்கம்..
இதையடுத்து கர்நாடகா, பஞ்சாப், கோவா மாநிலங்களில் தனது மேகி நூடுல்ஸ் உற்பத்தியைத் துவக்கியுள்ளதாக மும்பை பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் நெஸ்லே தெரிவித்தது.
ஆனால் பங்குச்சந்தை அமைப்பு இதற்கான முழுமையாகத் தகவல்களைக் கோரியுள்ளது.
நெஸ்லே
இதேபோல் மற்ற மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளிலும் கூடிய விரைவில் உற்பத்தியைத் துவக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், இதற்காக அந்தந்த மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நெஸ்லே தெரிவித்துள்ளது.
ரூ.450 கோடி இழப்பு
மேகி தடையால் நெஸ்லே நிறுவனம் சுமார் ரூ.450 கோடி இழப்பைச் சந்தித்தது. அதுமட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் விநியோகத்தில் உள்ள 30,000 டன் நூடுல்ஸ்களையும் அழித்தது நெஸ்லே. தற்போது சோதனைகளில் மீண்டுள்ளது மேகி நூடுல்ஸ்
லாபத்தில் சரிவு..
ஜூன் 30ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் மேகி தடையால் வெறும் 287.86 கோடி ரூபாய் லாபத்தை மட்டுமே நெஸ்லே பெற்றது.
மக்களின் கதி..
சரி.. புதிய தயாரிப்பின் மீதான சோதனையில் எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று அறிவிப்புகள் வெளியான நிலையில், புதிய மேகி நூடில்ஸ் தயாரிப்புக்கும், விற்பனைக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் இந்நிறுவனத்தின் பழைய தயாரிப்பின் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை நெஸ்லே எப்படி ஈடு செய்யும்.