டெல்லி: இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்நிலையில் 2015ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் மட்டும் சுமார் 3 மடங்கு அதிகமாக உயர்ந்து பன்னாட்டு நிறுவனமான அமேசான், வால்மார்ட் நிறுவனத்திற்கு இணையாகப் போட்டி போட்டு முன்னிலையில் உள்ளது.
வருவாய் உயர்வு..
மார்ச் மாதத்துடன் முடிந்த 2015 நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த வருவாய் 9,351.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2014 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 2,846 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி நிறுவனங்கள்
இந்தியா சந்தையில் உள்ள சில்லறை விற்பனை நிறுவனங்களான வால்மார்ட், மெட்ரோ, அமேசான் போன்ற நிறுவனங்களைவிடச் சுமார் 30 சதவீதம் அதிகமான வருவாய் பெற்றுள்ளது பிளிப்கார்ட்.
ரூ.400 கோடி நஷ்டம்
கடந்த நிதியாண்டில் 400 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்ததாகக் கூறிய பிளிப்கார்ட் நடப்பு நிதியாண்டின் லாபம் நஷ்டம் குறித்து எந்த விதமான தகவல்களையும் அளிக்கவில்லை.
இலக்கு
நடப்பு நிதியாண்டில் (2016ஆம் நிதியாண்டு) பிளிப்கார்ட் 65,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்வதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. அதாவது 10 பில்லியன் டாலர்.
இந்திய சந்தை
பிளிப்கார்ட் நிறுவனம் சிங்ப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான இருந்தாலும், தனது வர்த்தகம் முழுவதும் இந்தியா சந்தையில் மட்டுமே செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இணையாக அமேசான் நிறுவனம் அதீத முதலீட்டுடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. மேலும் ஸ்னாப்டீல், ஜபாங், பேடிஎம் போன்ற நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தைப் பெற போட்டி போட்டு வருகிறது.