பெங்களூரு: சர்வதேச சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் டைட்டன் நிறுவனம், ஹெச்பி நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
இப்புதிய கூட்டணியில் உருவாகும் ஸ்மார்ட் வாட்ச்கள் சந்தையில் உள்ள பிற வாட்ச்களை விடவும் சிறப்பாக இருக்கும் என டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூட்டு முயற்சி
ஹெச்பி மற்றும் டைட்டன் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் புதிய டிசைன், புதிய மெட்டிரியல் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளோம். இந்நிலையில் இதன் அறிமுகம் ஸ்மார்ட் வாட் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை உண்டாக்கும் என டைட்டன் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டில் அறிமுகம்..
இப்புதிய தயாரிப்புகள் 2016ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உலகச் சந்தைகளில் மட்டும் அறிமுகம் செய்வதாக டைட்டன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டாடா - TIDCO கூட்டணி
டைட்டன் நிறுவனம், டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழிற்துறை வளர்ச்சி கழகத்தின் (TIDCO) கூட்டணியில் 1987ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் கீழ் வாட்ச் மட்டும் அல்லாமல் நகைகள் மற்றும் கண்ணாடிகளும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
32 நாடுகளுக்கு ஏற்றுமதி
உலகளவில் வாட்ச் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் டாப் 5 நிறுவனங்களில் டைட்டன் இடம்பிடித்துள்ளது. இந்நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகில் 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
9 சதவீத வளர்ச்சி
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டைட்டன் நிறுவனம் 2014-15ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 11,791 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 2013ஆம் நிதியாண்டை ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகமாகும்.