டெல்லி: இந்திய வங்கிகளில் ஏற்பட்டுள்ள வராக் கடன் உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது, இதனால் சில வங்கிகள் நிதி நெருக்கடியில் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட உள்ளது.
இந்நிலையில் சில பொதுத் துறை வங்கிகள் வராக் கடன் பிரச்சனையைத் தவிர்க கல்விக் கடன் அளிப்பதைக் குறைத்துள்ளதாக நிதியமைச்சகம் திரட்டியுள்ள தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அருண் ஜேட்லி
2015-16 ஆண்டுக்கான இலக்குகளைச் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்திய வங்கிகள் 50 சதவீதம் வரை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம், பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
இதில் கார்பரேஷன் வங்கி, தேனா வங்கி, யூகோ வங்கி, எஸ்பிஐ, ஸ்டேட் பாங்க் ஆஃ பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகியவை இலக்குகளை எட்டவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
அப்படி என்ன இலக்கு..
நடப்பு நிதியாண்டில் கடன் அளிப்பதில் 20 சதவீத உயர்வும், கணக்கில் 15 சதவீத உயர்வும் அடைய வேண்டும் என வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கல்விக் கடன்
இந்திய வங்கிகள் அளித்துள்ள கல்விக் கடனில், வராக் கடன் தொடர்ந்து உயர்ந்து வருகிறது இது வங்கி செயல்பாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
கல்விக் கடன்களை மக்கள் திருப்பிச் செலுத்தும் வகையில் எளிமையாக்கப்பட வேண்டும் எனக் கூறினார். இதற்கான பணிகளைச் செய்யக் கேஓய்சி படிவங்கள் அதிகளவில் உதவும் எனவும் ராஜன் குறிப்பிட்டார்.
10 முதல் 20 லட்சம்
தற்போது நடைமுறையில் இருக்கும் கல்விக் கடன் திட்டத்தில், இந்திய கல்லூரிகளில் படிக்க மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரையும், வெளிநாட்டுக் கல்லூரிகளில் படிக்க ரூ.20 லட்சம் வரை கடன் அளிக்க வங்கிகளால் முடியும்.
இத்தகைய கடன்களைப் பெறும் மாணவர்கள் அவர்களின் கல்வி ஆண்டிலும், அதற்குப் பின் சில ஆண்டுகளுக்குக் கடன் திருப்பிச் செலுத்த தேவையில்லை. இக்கடனை மாணவர்கள் தங்களது கல்வியை முடித்த பிறகு 5 முதல் 7 வருடத்திற்குள் திருப்பிச் செய்த வங்கிகள் காலஅவகாசம் அளிக்கிறது.
4 லட்சம்
மேலும் வங்கிகள் 4 லட்சம் வரை அளிக்கப்படும் கடன்களுக்கு எவ்விதமான பிணைகளையும் பெறுவதில்லை. இந்த அளவீடுகளில் தான் 90 சதவீத கல்வி கடன் உள்ளதாக வங்கி தரவுகள் தெரிவிக்கிறது.
பிணைகள் ஏதுமில்லாத காரணத்தினால் தான் கடன் பெறுவோர் கடனை திருப்பிச் செலுத்துவதில் மெத்தனம் காட்டுவதாக வங்கி அமைப்புகள் குற்றம் சாட்டுகிறது.
கட்டுப்பாடுகள்
இத்தகைய காரணங்களால் கல்விக் கடனில், வராக் கடன் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கவும், கடன் அளவைக் குறைக்கவும் கல்விக் கடன் அளிக்கும் போது கடன் உத்தரவாதத்தைப் பெற வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் இனி கல்வி கடன் பெறுவதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவும் வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளது.
இழப்பீடு தொகை..
கல்விக் கடனில் ஏற்பட்டுள்ள வராக் கடன் உயர்வின் பாதிப்பை குறைக்க மனிதவள அமைச்சகம் 351.09 கோடி ரூபாய் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.