டெல்லி: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் டாக்ஸி புக்கிங் நிறுவனமான ஓலா, நிதியியல் பிரிவின் புதிய தலைவராக இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறிய முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால்-ஐ நியமித்துள்ளது.
ஓலா நிறுவனம் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மழை வெள்ளத்தையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி அசத்தியது.
இந்நிலையில் நிறுவன செயல்பாட்டிற்கு வலிமை சேர்க்கும் வகையில் முக்கிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகளைத் தனது நிறுவன பணியில் அமர்த்தி வருகிறது.
ராஜீவ் பன்சால்
நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 16 வருடமாகப் பல்வேறு பணிகளை மேற்கொண்ட ராஜீவ் பன்சால், கடந்த 2011 ஆண்டுத் தலைமை நிதியியல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிறுவனத்தில் உள்ள சில பிரச்சனை மற்றும் தன் சொந்த காரணங்களுக்காகக் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தனது ராஜிநாமாவை அறிவித்தார். மேலும் இவருக்கு நிதித்துறையில் சுமார் 21 வருடம் பணியாற்றிய அனுபவம் உண்டு.
ஓலாவில் ராஜீவ்
இந்நிறுவனத்தின் ராஜீவ் சீஎப்ஓ ஆக மட்டும் அல்லாமல் சீஈஓ-விற்கு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தலைமை நிர்வாகக் குழுவில் ராஜீவ் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிடீஷ் ஷா
தற்போது சீஎப்ஓவாக இருக்கும் மிடீஷ் ஷா, ராஜீவ் பன்சால் உடன் இணைந்து நிறுவனத்தின் நிதி மூலோபாய முன்னெடுப்புக்களைச் செய்ய உள்ளார் எனவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பளம்
மார்ச் 2015ஆம் ஆண்டு இன்போசிஸ் நிறுவன அறிக்கையின் படி, இந்நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் ஊழியர்களில் ராஜீவ் பன்சால் தான் டாப்பு. வருடத்திற்குச் சுமார் 7,70,858 அமெரிக்க டாலரைச் சம்பளமாகப் பெறுகிறார். இந்திய மதிப்பில் இதனைக் கணக்கிட கிளிக்ங்கோ..
ஓலா நிறுவனத்தில் இவரது சம்பளம் குறித்து எவ்விதமான தகவல்களும் அளிக்கவில்லை.
முதலீடும்.. வளர்ச்சியும்...
சமீபத்தில் ஓலா நிறுவனம் 500 மில்லியன் டாலர் வரையிலான நிதியைத் திரட்டியது. இதன் மூலம் இந்தியாவில் அதிக மதிப்புடைய ஸ்டார்ப்-அப் நிறுவனமாக ஓலா மாறியுள்ளது.
போட்டி
ஓலா நிறுவனம் இந்திய சந்தையில் அமெரிக்க நிறுவனமான உபர் மற்றும் மீரூ கேப்ஸ் நிறுவனத்துடன் கடுமையான போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் சுமார் 5 பில்லியன் டாலர் அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள்
இந்நிறுவனத்தில் சாப்ட்பேங்க் குரூப், டைகர் குளோபல், மாட்ரிக்ஸ் பார்னர்ஸ், ஸ்டீட்வியூவ் கேபிடல், சிகோயா இந்தியா, ஏசெல் பார்ட்னர்ஸ் மற்றும் பால்கன் எட்ஜ் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.