டெல்லி: நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகத் திகழும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை முன்பணமாக வழங்க உள்ளதாக டி.சி.எஸ். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்காக டிசிஎஸ் நிர்வாகம் சுமார் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
3 மாத சம்பளம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரையும் அல்லது குறைந்தது 3 மாத சம்பளத்தை முன்பணமாக அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த முன்பணத்தின் மீது எவ்வித வட்டியும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த முன்பணத் தொகையை ஊழியர்களின் ஒவ்வொரு மாத சம்பளத்தில் ஒரு சிறு தொகை நிர்வாகம் பிடித்துக்கொள்ளும். இத்தகையை நிதியுதவி ஊழியர்களின் இழப்பைக் கண்டிப்பாக ஈடு செய்யும் என டிசிஎஸ் நிர்வாகம் நம்புகிறது.
டிசம்பர் 14
இந்த வட்டியில்லாக் கடனை ஊழியர்கள் வருகிற டிசம்பர் 14ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் டிசிஎஸ் அறிவித்துள்ளது.
50 கோடி ரூபாய்
மேலும் அதிகளவில் பாதிக்கப்பட்ட சில முக்கிய ஊழியர்களுக்கு டிசிஸ் நிறுவனம் நிதியுதவி செய்யத் தனிப்பட்ட முறையில் 50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மருந்து மற்றும் மருத்துவமனை செலவுகள்
மழையால் பாதிக்கப்பட்ட டிசிஎஸ் ஊழியர்கள் செய்யப்பட்ட அனைத்து மருந்து மற்றும் மருத்துவமனை செலவுகளை நிர்வாகம் திருப்பிக் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையில் ஐடி
இந்தியா மென்பொருள் துறையில் ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் சென்னையில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் பெரும்பாலான ஐ.டி.நிறுவனங்களை மூழ்கடித்தது.
இதனால் பெரும் பாதிப்புகளை ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் சந்தித்தனர். இதனால் இத்துறை வர்த்தகம் முழுமையாக முடங்கியது.
ரூ.15,000 நிவாரண உதவி
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள டி.சி.எஸ். நிறுவனத்தின் சப்போர்ட் மற்றும் சர்வீஸ் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.15,000 வரை நிவாரண உதவியும் வழங்கப்பட உள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.