டெல்லி: பல தடைகள் மற்றும் சோதனைகளைக் கடந்து வந்து ஆன்லைன் மூலம் மக்களை அடைந்த மேகி நூடுல்ஸ், கடைகளில் முழுமையான விற்பனைக்கு வருவதற்குள் மீண்டும் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுச் சோதனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.
இந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (FSSAI) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ்களை மீண்டும் சோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
FSSAI தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சி பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு மகாராஷ்டிர மாநில அரசு மற்றும் நெஸ்லே நிறுவனம் தடை நீக்கம் மற்றும் சோதனை முறைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மீண்டும் சோதனை
இதனிடையில் மேகி நூடுல்ஸ் தயாரிப்புகளை மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கை ஜனவரி 13-ம் தேதிக்கு மீண்டும் விசாரிக்கப் போவதாகவும், அப்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிப்பது குறித்துப் பரிசீலிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தவறு..
நெஸ்லே நிறுவனம் அரசு அங்கீகாரம் செய்த ஆய்வகங்களில் சோதனை நடத்தாமல் தாங்களாகவே சில ஆய்வகங்களைத் தேர்வு செய்து அவற்றில் சோதனை செய்து தரச் சான்று அளித்துள்ளது உணவு பாதுகாப்புத் தடைச் சட்டத்தின் அடிப்படை விதிகளுக்கு முரண்பாடாக உள்ளது என்று எப்எஸ்எஸ்ஏஐ சார்பில் சுட்டிக் காட்டினார்.
உத்தரவு
இத்தகைய சூழ்நிலையில் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் புதிய மேகி நூடுல்ஸ் தயாரிப்புகளைச் சோதனை நடத்துமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
90 மாதிரிகள்
சில வாரங்களுக்கு முன் நெஸ்லே நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளின் 90 மாதிரிகளை இந்தியாவில் உள்ள 6 ஆய்வு மையங்களில் நச்சுத்தன்மை குறித்த ஆய்வு நடந்தி, பாதுகாப்பான உணவுப் பொருள் எனச் சான்றிதழ் பெற்ற மும்பை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு விலக்கு பெற்று தனது 4 நான்கு தொழிற்சாலைகளில் உற்பத்தியைத் துவக்கியது.
9 தயாரிப்புகள்
ஆகஸ்ட் 13-ம் தேதி நெஸ்லேயின் மேகி நூடுல்ஸ் மற்றும் 9 தயாரிப்புகள் மீதான தடையை மும்பை உயர்நீதிமன்றம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.