சென்னை: தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் பெய்த கன மழை வெள்ளமாக மாறி சென்னை, கடலூர் பகுதிகளை அதிகளவில் பாதித்தது. இந்தக் கோரமான நிலையில் இருந்து தற்போது மீண்டும் வரும் வேளையில் மக்கள் தங்களின் இழப்பை கணக்கிட்டு வருகின்றனர்.
நடுத்தர வீடுகளில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பல பொருட்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மிகப்பெரிய முதலீட்டில் வாங்கிய கார், பைக் போன்றவையும் அதிகளவில் பாதிப்படைந்துள்ளதாக மக்கள் கதறி வருகின்றனர்.
இந்நிலையில் 8 கார்ப்பரேட் ஜெட் விமானங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்று இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீடுகளைக் கோரி விமான உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.
8 கார்ப்பரேட் ஜெட் விமானங்கள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 கர்ப்பரேட் ஜெட் விமானங்களின் உரிமையாளர்கள் பட்டியலை இப்போது பார்ப்போம்.
கல்யாண் ஜூவல்லரி, டிவிஎஸ் மோட்டார்ஸ், சன் டிவி, கருடா, ஜெட் ஏர்வேஸ், ஜோய் அலுக்காஸ் நிகறுவனத்தின் ஜோய் ஜெட்ஸ் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
3,000 கோடி ரூபாய்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் இந்நிலையில் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தனிநபர் மற்றும் நிறுவனங்களின் மூலம் சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீடு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோய் ஜெட்ஸ்
இதுகுறித்து ஜோய் ஜெட்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்களிடம் உள்ள பிரேஸில் தயாரிப்பான பினோம் 100 ரக விமானங்களில் ஏற்பட்டுள்ள தேசங்களை ஆராய்ந்து இழப்பைக் கணக்கிட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
பாதிக்கப்பட்ட 8 விமானங்களில் ஏற்பட்ட இழப்பீடுகளை வழங்குவதில் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய பங்கு வகித்தாலும், தனியார் நிறுவனங்களில் ஐசிஐசிஐ லோம்பார்ட், பஜாஜ் அலையன்ஸ் மற்றும் ஹெச்டிஎப்சி எர்கோ ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதுவரை பாதிக்கப்பட்ட 8 விமானங்களில் 5 விமான நிறுவனங்கள் 80 கோடி ரூபாய் மதிப்பிலான இழப்பீடுகளைக் கோரியுள்ளன.
வர்த்தக இழப்பு
மழையால் பாதிக்கப்பட்டு விமான நிலையங்களில் நிறுத்தப்பட்ட விமானத்தின் வர்த்தக இழப்பிற்கு எவ்விதமான சலுகையும், அளிக்க முடியாது என இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.