டெல்லி: ஒரு வருடத்திற்கு முன் நிதிப் பற்றாக்குறையால் நிறுவனத்தை நடத்தவே தவித்து வந்த ஸ்பைஸ்ஜெட், தற்போது நிறுவன விரிவாக்கத்திற்காக 150 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து கலாநிதி மாறன் முழுமையாக வெளியேறிய பின் நிர்வாகப் பொறுப்பு அனைத்தும் அஜய் சிங் தலைமையில் வந்தது. இதன் பின் நிறுவனத்தின் புதிய முதலீடு, மறு சீரமைப்புத் திட்டங்கள் மற்றும் அதிரடி தள்ளுபடி டிக்கெட் விற்பனையின் மூலம் சந்தையில் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடித்தது.
இந்நிலையில் பயணிகள் விமானச் சேவையில் தற்போது ஸ்பைஸ்ஜெட் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நிறுவன சேவையை விரிவாக்கம் செய்ய 100 முதல் 150 விமானங்கள் வரை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் தெரிவித்துள்ளது.
இதற்காக ஸ்பைஸ்ஜெட் போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.