மும்பை: ஜூன்-செப்டம்பர் மாத காலகட்டத்தில் இந்தியாவில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளின் விலை சுமார் 13.7 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆனால் வருடாந்திர அடிப்படையில் பார்க்கும் போது இதன் அளவு குறைவாகவே உள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் டெல்லியில் மட்டும் வீட்டு மனைகளின் விலை சுமார் 22 சதவீதம் வரை அதிகரித்து உச்சத்தை அடைந்துள்ளது.
ஹவுஸ் ப்ரைஸ் இன்டக்ஸ் எனப்படும் வீட்டு விலை குறியீட்டை (HPI) செப்டம்பர் காலாண்டுக்கான அளவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் இந்தியாவில் மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொச்சி ஆகிய 10 முக்கிய நகரங்களின் விலை நிலவரங்களை வெளியிட்டது.
இதன் அடிப்படையில் 2015ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டில் HPI குறியீடு 219.5 ஆக உள்ளது. முதல் காலாண்டில் இதன் அளவு 2015.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இக்காலாண்டில் டெல்லி, அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் அதிகளவிலான விலை உயர்வு அதிகரித்துள்ளது எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதேபோல் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் 2வது காலாண்டில் கொல்கத்தா, கொச்சி, மற்றும் பெங்களூரு நகரங்களில் வீட்டு மனைகளின் விலை குறைந்துள்ளது.