பெங்களூரு: 2015ஆம் ஆண்டின் ஜனவரி 8ஆம் தேதி நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் 10 ஆண்டுக் காலமாக இலங்கையில் தமிழ் மக்களை வாழ்வாதாரத்தைக் கேள்விக் குறியாக்கும் விதமாகச் சர்வாதிகார முறையில் ஆட்சி செய்து வந்த மஹிந்த ராஜபக்ஷவின் கொடூரமான ஆட்சிக்கு மைத்திரிபால சிறிசேன முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தலில் வெற்றிபெற்றார்.
வெற்றிபெற்ற கையோடு மைத்திரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக ஜனவரி 18ஆம் தேதியன்று இந்தியா வந்தார். இப்பயணத்தில் பல உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்களை நேரடியாகச் சந்தித்தார். அதுமட்டும் அல்லாமல் இரு நாடுகள் மத்தியில் அணுசக்தி ஒப்புந்தமும் செய்யப்பட்டு இந்தியா-இலங்கை நட்புறவில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது.
சீனா - இந்தியா
உலக நாடுகள் மத்தியில், மைத்திரிபால சிறிசேனாவின் இந்திய பயணம், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குச் சீனாவுடன் இருந்த இணைப்பைத் துண்டித்து இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் புதிய நட்புறவை வளர்க்கத் திட்டமிடும் வகையிலேயே பார்க்கப்பட்டது.
4 ஒப்பந்தங்கள்
சிறிசேனாவின் இந்திய பயணத்தில் இலங்கை உடன், இந்தியா சுமார் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டது. இதில் முக்கியமானது இரு நாடுகளுக்கு மத்தியிலான அணுசக்தி ஒப்பந்தம் தான். இதுவே அணுசக்தி துறையில் இலங்கை வெளிநாட்டுடன் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தமாகும்.
மோடி
இதன்பின் சிறிசேனாவின் அழைப்பை ஏற்றுப் பிரதமர் 2015ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் இலங்கை சென்றார். ராஜீவ் காந்தி 1987ஆம் ஆண்டு இலங்கை சென்றார் இதன் பின் இலங்கை சென்ற முதல் பிரதமர் மோடி ஆவார்.
யாழ்ப்பாணம்
மேலும் இலங்கை சென்ற பிரதமர் போர் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் (Jaffna) பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். அதுமட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வகையில் உரிய மற்றும் வேகமான நடவடிக்கையும் எடுக்குமாறு இலங்கை அதிபர் சிறிசேனா வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்ற தேர்தல்
அதன் பின் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற தேர்தலில் பல வேலைகளைச் செய்து பிரதமராக முயற்சித்த மஹிந்த ராஜபக்ஷவிற்கு மீண்டும் மக்கள் மூக்கை உடைத்தனர்.
ரணில் விக்கிரமசிங்க
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியத் தேசிய கட்சி (UNP) மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.
இந்தியா பயணம்
நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றிபெற்ற ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன போலவே முதல் வெளிநாட்டுப் பயணமாகச் செப்டம்பர் மாதத்தில் இந்தியா வந்தார்.
இந்தியா - இலங்கை
ரணில் விக்கிரமசிங்க இந்திய பயணத்தில் இந்திய மீனவர்கள் குறித்த பிரச்சனை, இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், இரு நாடுகளுக்கு மத்தியிலான புதிய வர்த்தகம் மற்றும் ஒன்றிணைந்த தீவிரவாத ஒடுக்குதல் மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.