சென்னை: 2015ஆம் ஆண்டு இறுதியை எட்டிய நிலையில், நாட்டு மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் நிதித்துறையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அசத்தலான 9 திட்டங்களை வெளியிட்டுள்ளது.
வங்களேன் மோடி அரசு அப்படி என்னென்ன திட்டம் வெளியிட்டுள்ளது என்று ஒரு ரவுண்டு பார்ப்போம்..
பிரதான் மந்திரி முத்ரா யோஜனா
நாட்டில் சிறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் முத்ரா வங்கியைத் துவங்கி வைத்தார்.
இவ்வங்கியின் கீழ் திறக்கப்பட்ட பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கவும், மக்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
அது என்ன முத்ரா வங்கி, Micro Units Development Refinance Agency என்பதன் சுருக்கமே முத்ரா (MUDRA).
பிரதான் மந்திரி அடல் பென்ஷன் யோஜனா
பென்ஷன் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் சேரலாம். இவர்கள் மாதந்தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்யலாம். ஆண்டுத் தோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை இந்தத் தொகையைச் செலுத்தி வந்தால், அவர்கள் 60 வயதில் இருந்து மாதந்தோறும் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை பென்ஷன் பெறலாம்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
விபத்து காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆண்டுத் தோறும் ரூ.12 பிரிமியம் செலுத்தி வந்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம். விபத்தினால் ஏற்படும் நிரந்தர உடல் செயல் இழப்பும் இதில் அடங்கும்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
அடுத்து 18 முதல் 50 வயது வரை வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரலாம். இதற்கு ஆண்டுத் தோறும் ரூ.330 பிரிமியம் செலுத்த வேண்டும். இந்தப் பிரிமியம் செலுத்துவோருக்கு மரணத்துக்குப்பின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு தொகை கிடைக்கும். இவற்றுக்கான பிரிமியம் மற்றும் ஓய்வூதிய மாதாந்திர தொகை ஆகியவை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
சுகன்யா சம்ரித்தி திட்டம்
மத்திய அரசு இந்தியாவில் பெண் குழந்தைகளைப் போற்றும் வகையிலும், அவர்களுக்குச் சரியான மற்றும் முறையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை உணர்த்தி 10 வயது குறைவான பெண் குழந்தைகளுக்காக "சுகன்யா சம்ரித்தி" என்னும் புதிய டெப்பாசிட் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
மேலும் இத்திட்டம் பிரதமர் மோடி துவக்கிய "பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
டிஜிட்டல் லாக்கர்
இன்றைய உலகில் எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் இணைய யுகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை, இனி கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து வைத்துப் பாதுகாப்பதுடன், டிஜிட்டல் வடிவிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான வசதியை மத்திய அரசின், 'டிஜிட்டல் லாக்கர்' திட்டம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அளிக்கிறது.
தங்க டெபாசிட் திட்டம்
இத்திட்டம், 1999-ம் ஆண்டுக் கொண்டுவரப்பட்ட தங்க டெபாசிட் திட்டத்துக்கு மாற்றாக அமல்படுத்தப்படுகிறது. இருப்பினும், தங்க டெபாசிட் திட்டம் முதிர்வடையும் வரை, அதில் பழைய வாடிக்கையாளர்கள் தொடரலாம். ஒரே நேரத்தில் குறைந்தபட்சமாக 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்யலாம். அது, கட்டியாகவோ, நாணயமாகவோ, நகையாகவோ இருக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்சவரம்பு கிடையாது.
தங்கப் பத்திர திட்டம்
2 கிராம் தங்க சேமிப்புப் பத்திரம் முதல் 500 கிராம் தங்க சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டத்தில், பத்திரங்கள், வங்கிகளிலும், சில குறிப்பிட்ட அஞ்சலகங்களிலும் கிடைக்கும். இதன் முதிர்வு காலம் 8 ஆண்டுகள். அதன்பிறகு, எத்தனை கிராம் தங்கப் பத்திரம் எடுத்துள்ளோமோ, அதைத் தங்கமாகவோ அல்லது பணமாகவோ திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். பணமாகப் பெற்றால் மட்டுமே, அதற்கு வரி விதிக்கப்படும். தங்கமாகப் பெற்றால், வரி கிடையாது. முதிர்வு காலத்தில், தங்கத்தின் விலை எவ்வளவு இருந்தாலும், நாம் முதலீடு செய்த தங்கம் அப்படியே கிடைக்கும்.
தங்க நாணயம் திட்டம்
இந்திய தங்க நாணயம் மற்றும் தங்கக்கட்டி திட்டத்தில் உள்நாட்டிலேயே அச்சிடப்பட்ட முதலாவது தேசிய தங்க நாணயம். ஒரு பக்கம், அசோக சக்கரமும், அடுத்தப் பக்கம் மகாத்மா காந்தி உருவமும் பொறிக்கப்பட்டு இருக்கும். முதலில், 5 கிராம் மற்றும் 10 கிராம் எடையுள்ள தங்க காசுகள் விற்கப்படும். பிறகு, 20 கிராம் தங்க கட்டியும் விற்கப்படும். போலி காசு தயாரிக்க முடியாத அளவுக்கு, அவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். 24 கேரட் தூய்மையுடன் இருக்கும். ஹால்மார்க் முத்திரை பொறிக்கப்பட்டு இருக்கும்.