சென்னை: சர்வதேச நாடுகளில் அழகு சாதனப் பொருள்கள் மற்றும் ஊட்டச்சத்துப் பொருள்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனமான ஆம்வே, இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில் புதிய உற்பத்தி ஆலையைத் திறந்துள்ளது.
ஆம்வே இந்தியா நிறுவனம் அமெரிக்காவில் செயல்படும் ஆம்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கிளை நிறுவனமாகும். இந்த நிறுவனம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் சுமார் ரூ. 550 கோடி முதலீட்டில் ஆலையை அமைத்துள்ளது.
ஆம்வே இந்தியா நிறுவனத்தின் புதிய இந்த ஆலையை முதல்வர் ஜெயலலிதா ஆன்லைன் மூலம் திறந்து வைத்தார்.
சர்வதேச முதலீட்டாளர் மாநாடு
சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் அம்வே மற்றும் தமிழ்நாடு அரசு மத்தியில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி இந்த அமெரிக்க நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது உற்பத்தி கிளையைத் துவங்கியுள்ளது.
வேலைவாய்ப்புகள்
இப்புதிய தொழிற்சாலையின் மூலம் 500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 1,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
ஒப்பந்தம்
2012-ம் ஆண்டில் ரூ. 350 கோடி முதலீட்டில் ஆலை அமைக்க ஆம்வே நிறுவனம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது. இங்கு நிலவும் சாதகமான சூழலைக் கருத்தில் கொண்டு சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் முதலீட்டு அளவை ரூ.550 கோடியாக உயர்த்தி அதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
சிஎஸ்ஆர் பணிகள்
மேலும் ஆம்வே நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயல்பாடு (சிஎஸ்ஆர்) அடிப்படையில் இந்த ஆலையைச் சுற்றியுள்ள 10 கிராமங்களைத் தத்து எடுத்து அங்கு மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தித் தந்துள்ளதாகவும் மேலும் 10 கிராமங்களைத் தத்து எடுத்து இத்தகைய வசதி செய்து தர உள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அன்ஷு புத்ராஜா தெரிவித்தார்.
இப்புதிய தொழிற்சாலையில் ஆம்வே நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவும் அமைந்துள்ளது.
சீனா, வியட்நாம்.. தற்போது இந்தியா..!
அமெரிக்காவுக்கு வெளியே ஆம்வே நிறுவனம் உருவாக்கியுள்ள மூன்றாவது ஆலை இதுவாகும்.
ஏற்கெனவே இந்நிறுவன ஆலைகள் சீனா மற்றும் வியட்நாமில் உள்ளன. இந்நிறுவனம் இதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.800 கோடி முதலீடு செய்துள்ளதாகப் புத்ராஜா தெரிவித்துள்ளார்.
புதிய தயாரிப்புகள்
புத்தாண்டில் புதிதாக 10 தயாரிப்புகள் அறிமுகம் செய்ய உள்ளதாகப் புத்ராஜா குறிப்பிட்டார். புதிய ஆலையில் 9 உற்பத்தி பிரிவுகளில் ஊட்டச்சத்து, அழகு சாதனப் பொருள் உள்ளிட்டவை தயாரிக்கப்படும் எனவும் கூறினார்.