அபுதாபி: சர்வதேச சந்தையில், அமெரிக்கக் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குப் போட்டியாக வளைகுடா நாடுகளின் அதிகளவிலான எண்ணெய் ஏற்றுமதி, உற்பத்தியில் தொடர்ந்து உயர்வு ஆகியவை, கச்சா எண்ணெய்யின் விலையை 100 டாலரில் இருந்து 40 டாலராகக் குறைத்தது.
சந்தையில் போதிய அளவில் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கும் போதும், வளைகுடா நாடுகளின் அதீத உற்பத்தி கச்சா எண்ணெய் சந்தையை முழுமையாக உருக்குலைந்தது.
இந்நிலையில் உற்பத்தி விலைக்கே கச்சா எண்ணெய் விற்பனை செய்ததால் வளைகுடா நாடுகள் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. சொல்லப்போனால் பட்ஜெட் போடுவதற்குக் கூடப் போதிய பணம் இல்லாமல் நிதிப்பற்றாக்குறையில் தவித்து வருகிறது என்பதே உண்மை.
தற்போது அமெரிக்காவுடன் போட்டி போட்டது போதும் என்று முடிவு செய்த வளைகுடா நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் இந்நாட்டில் அளிக்கப்பட்டு வரும் பிற சேவைகளுக்கான மானிய தொகையை நிறுத்தவும், கச்சா எண்ணெய்யின் விலையை உயர்த்தவும், புதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
பஹ்ரைன்
இந்நிலையில் பஹ்ரைன் தனது கச்சா எண்ணெய்யின் விலையை உயர்ந்த போவதாகவும், இதன் மூலம் தன் நாட்டின் நிதி நிலையை மற்றும் எண்ணெய் வர்த்தகம் மேம்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதில் பஹ்ரைன் மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளும் கச்சா எண்ணெய் விலை உயர்த்த போவதாகத் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா
கச்சா எண்ணெய் விலை குறைப்பில் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் சவுதி அரேபியா மிகமுக்கியமானது. 2015ஆம் ஆண்டுப் பட்ஜெட்டில் சவுதி அரேபியா சுமார் 98 பில்லியன் டாலர் நிதி பற்றாக்குறையைப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் சரிசெய்யச் சவுதி அரேபியா இருக்கும் ஓரே ஆயுதம் கச்சா எண்ணெய். இதனால் இந்நாட்டின் வெள்ளிக்கிழமை அறிவிப்பின் படி அடுத்தச் சில நாட்களில் தனது கச்சா எண்ணெய் விலையை 50 சதவீதம் வரை உயர்த்த உள்ளது.
ஒமன்
சவுதி அரேபியா நாட்டை அடுத்து அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது ஒமன் தான். இதனால் ஜனவரி 2016ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் ஒமன் நாடும் தனது கச்சா எண்ணெய் விலையைச் சவுதி அரேபியாவிற்கு நிகராக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்தின் படி ஒமன் ஒரு நாளில் சராசரியாக 55 மில்லியன் டாலர் வரை நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.
கத்தார் மற்றும் குவைத்
சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் நாடுகளை ஒப்பிடும்போது கத்தார் மற்றும் குவைத் நாடுகளின் நிதிநிலை சிறப்பாக உள்ளது என்றே சொல்லலாம்.
நிதி நிலை
இந்தத் திடீர் விலை உயர்வால் கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை அதிகரித்தாலும், உலக நாடுகள் பாதிக்கப்பட்டாலும் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்த வளைகுடா நாடுகள் அதிகளவிலான வருமானத்தைப் பெறும்.
இதனால் இந்நாடுகளின் நிதிநிலை மற்றும் நஷ்ட அளவுகள் கணிசமாகக் குறையும்.
ஏற்றுமதி
வளைகுடா நாடுகளின் இந்த விலை உயர்வால் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் விலையும், ஏற்றுமதி செலவுகளும் அதிகரிக்கும். இதனால் இந்தியாவின் டாலர் இருப்பில் கடுமையான பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
எரிபொருள் மானியம்
மேலும் சமீபகாலத்தில் உலக நாடுகளில் ஜிசிசி நாடுகளைத் தவிர இந்தியா, எகிப்து, மலேசியா ஆகிய நாடுகளிலும் எரிபொருள் மானியம் திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
கச்சா எண்ணெய் விலை 100 டாலரில் இருந்து 40 டாலராகக் குறைந்த இந்நிலையில் கூட மத்திய அரசு மக்களுக்கு அதற்கான பலனை அளிக்கவில்லை.
தற்போது ஏற்றுமதி செய்யும் நாடுகள் விலை உயர்த்தும் இவ்வேளையில் என்ன செய்யப்போகிறது. மக்கள் கதி எப்போதும் அதோகதி தான்.