டெல்லி: சஹாரா குழுமத்தின் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஃபோர்ட்போலியோ நிர்வாக உரிமத்தைச் செபி அமைப்பு ரத்து செய்ததைத் தொடர்ந்து அதனைத் திரும்ப அளிக்குமாறு மனு அளித்தது.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான (செபி) சஹாரா குழுமத்தின் உரிமம் குறித்த கோரிக்கையை அதிரடியாக நிராகரித்துவிட்டது.
நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா இந்தியா 24,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் சிக்கித்தவித்து வருவதால் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி இந்நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகம் மற்றும் பரிமாற்றத்தை முடக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் செபி பிறப்பித்த உத்தரவில் சஹாரா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் (ஏஎம்சி) முதலீட்டாளர்களை ஏமாற்றி 24,000 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதால், இத்தொகையை முழுமையாக அளிக்கும் வரை பங்குச்சந்தை சார்ந்த எவ்விதமான பணிகளைச் செய்யச் சஹாரா குழுமம் தகுதியை இழந்துள்ளது எனக் கூறி, ஃபோர்ட்போலியோ மேனேஜர் செயல்பாடுகளை ரத்து செய்தது.
இது தொடர்பாக லைசென்ஸ் ரத்து செய்ததை மறு பரிசீலனை செய்யுமாறு சஹாரா குழும நிறுவனம் விடுத்த கோரிக்கையைச் செபி நிராகரித்துவிட்டது.
இது குறித்து டிசம்பர் 30-ம் தேதியிட்ட கடிதத்தில் சஹாரா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவதா வேண்டாமா என்பதில் எவ்வித தயக்கமும் செபிக்கு இருந்ததில்லை. இத்தகைய பணிகளை நிறை வேற்றும் தகுதியை சஹாரா குழும நிறுவனம் இழந்துவிட்டது. மேலும் இந்நிறுவனத்தில் சஹாரா நிறுவனர் சுப்ரதா ராய்க்குக் கணிசமாகப் பங்குள்ளது. எனவே லைசென்ஸை திரும்ப அளிக்க முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு லைசென்ஸை புதுப்பிக்க முடியாது எனச் செபி தெரிவித்துள்ளது.