டெல்லி: மத்திய அரசு இன்று ஓரே நாளில் 6,050.10 கோடி ரூபாய் மதிப்பிலான 5 அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் காட்லியா ஹெல்த்கேர் நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு முதலீடும் அடக்கம்.
காட்லியா ஹெல்த்கேர் நிறுவனம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக QIB முறையில் நிறுவனப் பங்கு விற்பனையின் மூலம் அன்னிய முதலீட்டு வாயிலாகச் சுமார் 5000 கோடி ரூபாயை இந்திய சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு இதற்கான ஒப்புதல்களையும் மத்திய அரசிடம் இருந்து இன்று பெற்றுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் டிசம்பர் 21ஆம் தேதி கூட்டத்தின் முடிவின் படி மத்திய அரசு அரசு இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 6,050.10 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் ரெசிபார்ம் மருந்து தயாரிப்பு நிறுவனம் முழுமையாக இந்திய நிறுவனமாக மாற நிட்டின் லைப்சைன்ஸ் நிறுவனத்திடம் இருக்கும் தனது பங்குகளை வாங்க சுமார் 1,050 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீட்டுத் திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல் பியூமெர்க் கோர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தில் இருந்த என்ஆர்ஐ மற்றும் ரெசிடென்ட் முதலீட்டாளர்கள் பங்குகளை முழுமையாகப் பியூமெர்க் கார்பரேஷன் நிறுவனத்திற்கு மாற்ற 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கும் மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.