டெல்லி: இந்தியாவில் பிபிஎஃப் மற்றும் தபால் நிலையங்களில் அளிக்கப்படும் சிறுசேமிப்பு திட்டச் சேவைகளின் மீதான வட்டி விகிதத்தைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இப்புதிய வட்டி விகிதங்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிகிறது.
சிறு சேமிப்புத் திட்டங்கள்
இந்தியாவில் சாமானிய மக்கள் அதிகம் முதலீடு செய்யும் பிபிஎஃப் திட்டம், அஞ்சலக மாத சேமிப்புத் திட்டம், அஞ்சலக வைப்பு நிதி திட்டம், அஞ்சலகச் சேமிப்புக் கணக்குத் திட்டம், இது மட்டும் அல்லாமல் 5 ஆண்டுகளுக்குக் குறைவான முதிர்வு காலம் கொண்ட அனைத்துச் சேமிப்புத் திட்டங்கள் மற்றும் அரசு முதலீட்டுப் பத்திர திட்டங்களின் வட்டி விகிதத்தைக் குறைக்க உள்ளதாக மத்திய திட்டமிட்டுள்ளது.
சக்திகாந்த தாஸ்
சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகித குறைப்பு குறித்த முடிவுகளின் மத்திய அரசின் அறிக்கை கூடிய விரைவில் வெளியாகும் எனப் பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
காலம் மாறியது..
ஒரு காலத்தில் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக மக்களின் சேமிப்பு தொகைக்கு வங்கிகளை விட அதிக வட்டி தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பொருளாதாரத் தாராள மயம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து சிறுசேமிப்பு வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வருகிறது.
மோடி
இந்தச் சூழலில் சிறுசேமிப்பு மீதான வட்டி விகிதத்தை மோடி தலைமையிலான மத்திய அரசு மேலும் குறைக்க முடிவெடுத்துள்ளது மக்கள் மத்தியில் வருத்தம் தரும் செய்தியாக உள்ளது.
ஏப்ரல் 1 முதல்..
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதம் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் என்றும், வட்டி விகிதம் வருடாந்திர அடிப்படையில் இல்லாமல் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.