மும்பை: இந்தியாவில் மின்னணு தொழில்நுட்பம் மற்றும் மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்கப்படுத்த மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் செமிகன்டெக்டர் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எலக்ட்ரானிக் டெவலப்மென்ட் ஃபண்ட்
இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கவும், நேநோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்போர்மேஷன் டெக்னாலஜி துறை சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி அதிகரிக்க மத்திய அரசு EDF எனப்படும் எலக்ட்ரானிக் டெவலப்மென்ட் ஃபண்ட் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
நிதி உதவி
எலக்ட்ரானிக் டெவலப்மென்ட் ஃபண்ட் திட்டத்தில் ரூ.10,000 கோடி அளவிலான நிதியைத் திரட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் படியாக மத்திய அரசு சார்பாக 2,200 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 7,800 கோடி ரூபாய் நிதி தொகையைத் தனியார் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மூலம் பெற்றும் இத்துறை வளர்ச்சி பணிகளுக்கு மற்றும் இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கனரா வங்கி
EDF திட்டத்தை நிர்வாகம் செய்யப் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் கிளைகளில் ஒன்றான கேன்பாங்க் வென்சர்ஸ் கேபிடல் ஃபண்ட் நிறுவனத்தை மத்திய அரசு நியமித்துள்ளது.
இத்திட்டத்தில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை முக்கிய முதலீட்டாளராக விளங்கும்.
4 நிறுவனங்கள்
இத்திட்டத்தின் துவக்கமாக EDF மூலம் கர்நாடகா செமிகன்டெக்டர் வென்சர்ஸ் கேபிடல் ஃபண்ட், எக்ஸ்பினிட்டி டெக்னாலஜி ஃபண்ட், ஃபோரம் சினர்ஜிஸ் ஈடிஎஃப் டிஜிட்டல் இந்தியா ஃபண்ட் மற்றும் என்நியா சீட் கேபிடல் கார்ப்பரேஷன் ஃபண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு 169 கோடி ரூபாய் அளவிலான நிதியுதவி அளித்துள்ளது.
இந்நிலையில் EDF திட்டத்தில் வென்சர்ஸ் கேபிட்டல் நிறுவனங்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
இத்தகைய நிதியுதவி திட்டம் இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய உதவியாக அமையும், இதேபோல் இத்திட்டம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரான ரவி ஷங்கர் பிரசாத் அவர்களின் மிகப்பெரிய கனவு திட்டமாகும்.
ரவி ஷங்கர் பிரசாத்
இத்திட்டத்தின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் இப்புதிய நிதி திட்டத்தின் மூலம் இந்தியாவில் சைபர் செக்யூரிட்டி மற்றும் சிப் டிசைன் ஆகிய 2 துறையை ஊக்குவிக்க முடியும். இதன் மூலம் அடுத்தச் சில வருடங்களின் இந்தியா சைபர் செக்யூரிட்டி துறையில் உலகத் தரவரிசை பட்டியலில் முக்கிய இடத்தைப் பெறும் என ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.
முதலீட்டு வாய்ப்பு
EDF திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களும் முதலீடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், அடுத்தச் சில வருடங்களில் இத்திட்டத்தில் அதிகளவிலான அன்னிய முதலீட்டை எதிர்பார்க்கலாம்.