டெல்லி: நகை கடைகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால் வரி மற்றும் 2 லட்சத்திற்கு அதிகமான தொகைக்கு வாங்கப்படும் நகைகளுக்கு வாடிக்கையாளர்களின் பான் கார்டு பெறப்படுவது ஆகிய இரண்டு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் எனக் குஜராத் மாநிலம் மற்றும் நாட்டின் சில முக்கியப் பகுதிகளில் நகை உரிமையாளர் கடைகளை மூடி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகம் கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. இதன் எதிரொலியாகத் தங்கம் மீதான முதலீடும் அதன் ஏற்றுமதி மற்றும் வர்த்தகமும் குறைந்துள்ளது.
மோடி
இந்தப் பிரச்சனைக்குக் கூடிய விரைவில் பிரதமர் மோடி தலையீட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இரு அமைச்சர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோடியைச் சந்திக்க உள்ளனர்.
தமிழ்நாடு
தமிழ்நாட்டிலும் கடைகளை மூடும் போராட்டத்தை அறிவிக்கப்பட்டு இருந்தாலும் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. சேலம், ஈரோடு, கோவை, போன்ற முக்கிய வர்த்தக நகரங்களில் நகை கடைகள் அவ்வப்போது திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது.
வர்த்தகப் பாதிப்பு
குஜராத் மாநில அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் மோகன் குந்ரியா ஆகியோர் நகை கடைகள் போராட்டம் இதனால் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு மற்றும் இதர காரணிகளைக் குறித்துப் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளனர்.
விரைவான முடிவு
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன் குந்ரியா இப்பிரச்சனைகளுக்குக் கூடிய விரைவில் சிறப்பான முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான பணிகளை விரைவாகச் செய்து முடிக்கத் தலைமைக்குக் கோரிக்கை அளிக்கவும் தான் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
நல்லவர்களா..?
வாடிக்கையாளர் மத்தியில், நகை கடைகள் மீது கலால் வரி விதித்தால் அவை வாடிக்கையாளர் தலையில் விழும் எனத் தவறான கருத்து நிலவி வருகிறது. வாடிக்கையாளர்களுக்காக நகைகடைகள் போராட்டம் நடத்தும் அளவிற்கு அவ்வளவு நல்லவர்களா அவர்கள் என யோசிக்க வேண்டும்.
கலால் வரி
இந்தக் கலால் வரி முழுக்கமுழுக்க நகைக்கடை உரிமையாளர்களையே சேரும். மேலும் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வாங்கப்படும் நகைகளுக்கு மத்திய அரசு பான் கார்டு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் மக்களுக்குச் சரி நகை கடைகளுக்குச் சரி, கொஞ்சம் கஷ்டம் தான்.
கருப்பு சந்தை வியாபாரம்
ஏனென்றால் பொதுவாக நகைக் கடைகள் தங்களது வர்த்தகக் கணக்கை உண்மையான மற்றும் முழுமையான கணக்கை காட்டுவதில்லை. மத்திய அரசின் கணக்கிற்கு வருவது வெறும் 75 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறது எனக் கூறுகிறது.
பான் கார்டு
இதனை முறைப்படுத்தவே மக்கள் மற்றும் நகைக் கடைகள் அனைவரின் வருமானம் மற்றும் சொத்து இருப்பைக் கணக்கில் கொண்டு வர பான் கார்டு கட்டாயத்தை அறிவித்தது.