டெல்லி: இந்திய சந்தையில் பணவீக்கத்தின் அளவு, கணித்ததை விடவும் குறைவாக உள்ளது. இதனால் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில் நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வட்டி விகிதங்கள் குறைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம் எனத் தெரிகிறது.
பிப்ரவரி மாதத்தில் சிபிஐ எனப்படும் நுகர்வோர் விலை குறியீட்டின் அளவு 4 மாத சரிவில் 5.18 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சில்லறை பணவீக்கத்தின் அளவும் 5.69 (ஜனவரி) சதவீதத்தில் இருந்து 5.37 சதவீதமாகப் பிப்ரவரி மாதம் குறைந்துள்ளது. கடந்த 7 மாதத்தில் முதல் முறையாகப் பிப்ரவரி மாதம் தொடர் சரிவில் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது.
சனிக்கிழமை ரிசர்வ் வங்கி தலைவர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி அளவுகள் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை. மேலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது சரிவில் மீண்டு வரும் நிலையில் உள்ளதால் வட்டி குறைப்புச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறினார்.
நுகர்வோர் விலை குறியீட்டில் 46 சதவீதம் ஆதிக்கம் கொண்ட உணவு பணவீக்கம் பிப்ரவரி மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 6.85 சதவீதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் 5.30 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் அளவு 6.88 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்த விலை பணவீக்கம்
இந்நிலையில் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு தொடர்ந்து 16 மாதக் காலமாகப் பணவாட்ட நிலையிலேயே உள்ளது. 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் (-) 0.90 சதவீதத்தில் இருந்து (-) 0.91 சதவீதமாக உள்ளது.