சென்னை: இந்திய பொருளாதார வரலாற்றில் கடந்த 15 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ள ஒரு முக்கியத் துறையான தகவல் தொழில்நுட்ப துறை மிகப்பெரிய சரிவை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளதாக வர்த்தகச் சந்தையில் கருத்து நிலவுகிறது.
இதற்கு ஆதாரமாக இந்திய டெக்னாலஜி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் குவிந்த அதிகப்படியான அன்னிய முதலீடு கடந்த சில மாதங்களில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்காவும்.. இந்திய ஐடி நிறுவனங்களும்..
அமெரிக்காவில் இந்திய ஐடி நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கக் கடுமையான கட்டுப்பாடுகள், விசா கட்டணங்கள் உயர்வு, விசா வழங்குவதில் புதிய கட்டுப்பாடு எனப் பல நெருக்கடிகள் சூழ்ந்துள்ளது.
இதனால் அமெரிக்கச் சந்தையில் இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
திருட்டு வழக்கில் டிசிஎஸ்
இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் அந்நாட்டு எபிக் நிறுவனத்தின் வர்த்தக ரகசியங்களைத் திருடியுள்ளதாக 1 பில்லியன் டாலர் அபராதம் பெற்றுள்ளது.
வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள்
இந்திய முன்னணி ஐடி நிறுவனங்களிடம் பல வருடங்களாக மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையைப் பெற்று வந்த ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் பல இந்திய சந்தையை விட்டு முழுமையாக வெளியேறி தகவல் தொழில்நுட்ப சேவைக்காகப் பிற நாட்டுக்குச் சென்றுள்ளது.
பிரஷ்ஷர்களின் சம்பளம்
அதுமட்டும் அல்லாமல் புதிதாக ஐடி நிறுவனங்களின் சேரும் மாணவர்களுக்கு (Fresher) இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பல வருடங்களாக ஊதியத்தை உயர்த்தாத நிலையில், இந்த வருடமும் எவ்விதமான சம்பள உயர்வும் இருக்காது என ஐடி நிறுவனங்கள் தெரிவித்தள்ளது.
பிபிஓ
இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த பிபிஓ சேவை நிறுவனங்கள் இன்று இடம் தெரியாமல் தொலைந்து போய் உள்ளது. குறிப்பாக இந்திய சந்தையின் அதிகப்படியான பிபிஓ வர்த்தகம் தற்போது பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்குப் பறந்துள்ளது.
சரியும் சந்தை..
இதனால் மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் இத்துறையின் மீதான நம்பிக்கையைத் தொடர்ந்து இழந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 வருடத்தில் இந்திய ஐடித் துறையின் சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கும் குறைவான அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.