மும்பை: காஃபி முதல் வைன் வரை எனப் பலதரப்பட்ட பானங்களை உயர்தரத்தில் விற்பனை செய்யும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இந்திய கிளையில் இனி வாரத்திற்கு 5 நாள் மட்டுமே வேலை என்ற புதிய திட்டத்தை அமலாக்கம் செய்துள்ளது டாடா-ஸ்டார்பக்ஸ் நிர்வாகம்.
இதனால் இந்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வாரத்திற்கு 5 நாட்களுக்குக் குறைவான வேலைநாட்கள் என்ற முறையை அமலாக்கம் செய்து வருகிறது.
\
இந்நிலையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 வேலைநாட்கள் என்ற முறையை வருகிற மே 15 முதல் அமலாக்கம் செய்யப்படும் என ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் இந்திய கிளையின் சீஇஓ சுமிடிரோ கோஷ் தெரிவித்தார்.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் டாடா நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2012ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 83 கிளைகள் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 1,200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஊழியர்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட ஸ்டார்பக்ஸ் நிர்வாகம், சீனா கிளைகளில் இருக்கும் ஊழியர்களுக்கு மாதந்திர வீட்டுக் கொடுப்பனவு, பிரிட்டன் நாட்டு ஊழியர்களுக்கு வட்டியில்லாக் கடன், அமெரிக்கக் கிளை ஊழியர்களுக்குக் கல்விக்கான ஊக்கத்தொகை எனப் பல உதவிகளைச் செய்துள்ளது.