டெல்லி: மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் பெட்டி அல்லது கவர் மீது அதன் பாதிப்பு குறித்த எச்சரிக்கை 85 சதவீதம் நிரப்ப வேண்டும் என அறிவித்திருந்தது.
இதன்படி சிகரெட் மற்றும் புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது எச்சரிக்கை வடிவத்தை மாற்றியமைக்கும் முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்புதிய மாற்றத்திற்காக மே 4ஆம் தேதி நிறுத்திவைக்கப்பட்ட சிகரெட் தயாரிப்பை ஐடிசி நிறுவனம் தற்போது துவங்கியுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்துச் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் உற்பத்தியாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றமும் மத்திய அரசின் அறிவிப்பை மாற்ற முடியாது என்றும், மாற்றத்தை நிறுவனங்கள் உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது.
அரசின் இப்புதிய மாற்றம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் சிகரெட் மற்றும் புகையிலை விற்பனையில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் ஐடிசி நிறுவனம், 8 பிராண்டுகளில் சிக்ரெட் விற்பனை செய்கிறது.
இந்நிறுவனம் எப்எம்ஜிசி துறையில் பிஸ்கெட், நூடில்ஸ் போன்ற பல பொருட்களை விற்பனை செய்தாலும், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் வர்த்தகத்தின் மூலம் 65 சதவீதத்திற்கும் அதிகமான வருவாய்ப் பெறுகிறது.