டெல்லி: இந்திய சந்தையில் 17 மாதங்களுக்குப் பின் உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரையின் விலை உயர்வால் மொத்த விலை பணவீக்கம், எதிர்மறை பணவீக்கத்தில் இருந்து (+)0.34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த விலை பணவீக்கத்தின் அளவு -0.85 சதவீதமாகவும், கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் -2.43 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத நாணயக் கொள்கை மறு ஆய்வில் வட்டி விகிதம் குறைக்கப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனச் சந்தை வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் -2.26 சதவீதமாக இருந்த காய்கறிகளின் மீதான மொத்த விலை பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 2.21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மொத்த விலை பணவீக்கத்தில் 65 சதவீதம் ஆதிக்கம் செலுத்தும் உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் 0.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் இதன் அளவு -0.13 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 17 மாதங்களுக்குப் பின் முதல் முறையாக (+)0.34% உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரையின் விலை உயர்வு தான்.