மும்பை: ஹாங்காங் அண்ட் ஷங்காய் பாங்கிங் கார்ப் (HSBC) நிறுவனம் இந்தியாவில் 14 நகரங்களில் 50 கிளைகளைக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது.
கடந்த சில வருடமாக இவ்வங்கியின் ரீடைல் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் வர்த்தகம் பெருமளவில் ஆன்லைன் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கத் துவங்கியுள்ளது. இதனால் இந்திய சந்தையில் இருக்கும் 50 கிளைகளில் 24 கிளைகளை முழுமையாக மூடத் திட்டமிட்டுள்ளது எச்எஸ்பிசி.
டிஜிட்டல் ஆதிக்கம்
இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் நுழைந்த டிஜிட்டல் புரட்சி சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசு மற்றும் பொருளாதார வளம் மிக்க நாடுகளில் பல வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது.
வங்கி மற்றும் முதலீட்டுச் சேவைகளை வழங்கி வரும் வங்கி நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான சேவைகளையும் ஆன்லைன் மூலமாகவே தற்போது அளித்து வருகிறது. இதன் எதிரொலியாகவே வங்கிக் கிளைகளை மூட எச்எஸ்பிசி முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த விசாரணையில் இந்திய சந்தையில் இருக்கும் எச்எஸ்பிசி இந்திய வரித் துறையினரால் கடுமையான விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது. இதன் பின் சில மாதங்களில் இந்தியாவில் எச்எஸ்பிசி அளித்து வரும் தனியார் வங்கி சேவையை முழுமையாக நிறுத்தி வைத்துவிட்டது.
இந்நிலையில் தற்போது HSBC செலவின குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருக்கும் 50 கிளை எண்ணிக்கையை 26ஆகக் குறைக்க அதாவது 24 கிளைகளை முழுமையாக மூட முடிவு செய்துள்ளது.
மூடப்படும் கிளைகளில் எச்எஸ்பிசி-யின் மொத்த இந்திய வாடிக்கையாளர்களில் வெறும் 10 சதவீத மட்டுமே கொண்டுள்ளது. இதனால் இந்த 24 கிளைகளை மூடவும் அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் சேவை அளிக்கவும் HSBC நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எச்எஸ்பிசி நிறுவனத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 350 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், சென்னை, கவ்ஹாத்தி, இந்தூர், ஜோத்பூர், லக்னோ, லூதியானா, மும்பை, மைசூர், நாக்பூர், நாசிக், பாட்னா, புனே, ராய்ப்பூர், சூரத், திருவனந்தபுரம், வதோதரா, விசாகப்பட்டினம், டெல்லி, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் எச்எஸ்பிசி தனது வர்த்தகத்தைச் செய்து வருகிறது.