டெல்லி: உலகிலேயே அதிகக் கிளைகளைக் கொண்டுள்ள தபால் துறை என்றால் அது இந்திய தபால் துறை தான்.
இந்நிலையில் இந்திய தபால் துறையின் மந்தமான வர்த்தகம் மற்றும் வருவாய் அளவை அதிகரிக்கப் பேமெண்டஸ் வங்கியை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் ஒப்புதல் மூலம் இந்தியா போஸ்ட், 800 கோடி ரூபாய் முதலீட்டில் 2017ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதத்திற்கு இந்தியா முழுவதும் சுமார் 650 கிளைகளைக் கொண்டு இந்தியா போஸ்ட் பேமென்ட் பாங்க் துவங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் முழுவதும் சுமாக் 1.54 லட்சம் தபால் நிலையங்களை வைத்துள்ள இந்தியா போஸ்ட் 650 பேமென்ட் வங்கி கிளைகளைத் துவங்க உள்ளதாகத் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இவ்வங்கியைத் தலைமை நிர்வாக அதிகாரியின் கீழ் முழுமையாக நிர்வகிக்கப்படும். மேலும் நிர்வாகக் குழுவில் பல்வேறு அரசு துறையின் மூத்த அதிகாரிகளும் பங்குபெறுவார்கள் எனவும் ரவி சங்கர் பிரசாத் கூறினார். இதில் தபால் துறை, மத்திய செலவின துறை, பொருளாதாரச் சேவை துறை அதிகாரிகள் எனப் பல துறைகளின் உயர் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
மேலும் 650 கிளைகள் துவக்கம் என்பது 3 வருடத் திட்டம் என்றாலும் விரைவான திட்டவரைவுகளின் படி இந்த இலக்கை ஒரே வருடத்தில் நிறைவேற்ற உள்ளோம் எனப் பிரசாத் கூறினார்.