டெல்லி: இந்தியாவில் ரயில்வே சேவையை மேம்படுத்துவதற்காகப் பல முக்கியப் பணிகளைச் செய்து வரும் இந்திய ரயில்வே துறை, 2020ஆம் ஆண்டுக்குள் பயணிகள் அனைவருக்கும் காத்திருப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உறுதி டிக்கெட் அளிக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்கள் கடந்துள்ளது நிலையில், அனைத்துத் துறைகளும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால் ரயில்வே துறைமட்டும் வருவாய் வளர்ச்சி மற்றும் லாபத்திற்காகப் போராடி வருகிறது.
சுரேஷ் பிரபு
2020ஆம் ஆண்டுகள் தற்போதைய நிலவரத்தின் படி பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்களின் தேவையைப் பூர்த்திச் செய்யப்படும்.
ரயில்கள் மற்றும் இருக்கைகள் அதிகப்படுத்துவதன் மூலம் பயணிகள் முன்பதிவு செய்யும் போது வெயிடிங் லிஸ்ட் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அனைவருக்கும் உறுதிச் சீட்டு (Confirmed Tickets) கிடைக்கும் என்று சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்தார்.
ஈடிவி செய்திகள் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது ரயில்வே துறை அமைச்சரான சுரேஷ் பிரபு அதைக் கூறினார்.
பணிகள் சேவை
அதுமட்டும் அல்லாமல் பயணிகள் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக அவர்களுக்கான சேவை தரத்தை உயர்த்துவதில் மிகப்பெரிய அதிகளவிலான கவனத்தைச் செலுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ரயில் பெட்டிகள்
மேலும் முக்கிய வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப ரயில் பெட்டிகள் அதிகளவில் சேர்க்கப்படும் எனவும் கூறினார்.
புல்லட் ரயில்
இந்திய ரயில் துறை வரலாற்றில் விலை மதிப்பில் மிகப்பெரிய திட்டமாகப் பார்க்கப்படும் மும்பை - அகமதாபாத் வரையிலான புல்லட் ரயில் திட்டம் இத்துறையின் வடிவத்தையே முழுமையாக மாற்றப்போகிறது எனத் தெரிவித்தார் சுரேஷ் பிரபு.
முதலீடு
இத்துறையின் விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அரசு அதிகளவில் நிதியுதவி செய்தாலும், தனியார் நிறுவனங்களின் பங்கீடும் முதலீடும் அவசியம் எனப் பல முறை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே துறை
கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை வளர்ச்சிக்காகப் பல முக்கியப் பணிகளை மத்திய அரசுகள் செய்துள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்நிலையில் இத்துறையில் பயணிகள் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக அவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு முறையில் இருந்து சேவையை மேம்படுத்துதல் வரை அனைத்தையும் மாற்றி வருகிறது தற்போதைய மத்திய அரசு.