டெல்லி: ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேற அந்நாட்டு மக்கள் அதிகளவில் ஆதரவும் அளித்துள்ளதால், இந்திய சந்தையை மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தைகளும் இன்று கலகலத்துப் போயுள்ளது.
குறிப்பாகச் சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகள் வரையிலான சரிவு, அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.06 ரூபாயாக உயர்வு ஆகியவை இந்திய சந்தையை அதிகளவில் பாதித்துள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படும் வர்த்தகம் மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனப் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் வெளியேற்றத்திற்கான அறிவிப்புகள் மற்றும் செய்திகள் வெளியான தருணத்தில் பங்குச்சந்தை மற்றும் நாணய மதிப்பு அதிகளவில் பாதிப்புகளைக் கண்டாலும், இந்தப் பாதிப்பு தொடர்ந்து கட்டுப்படுத்தப்படும், அதற்கான தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆசிய சந்தையின் தாக்கத்தின் காரணமாக ரூபாய் மதிப்பு அதிகளவில் பாதிக்கப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் பிரிட்டன் சந்தையின் மூலம் ஏற்படும் தாக்கம் குறைவு தான் என்றும் தாஸ் கூறினார்.
மேலும் இந்திய சந்தைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து விரைவாக மீண்டு வரும் எனவும் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.