டெல்லி: தங்கத்தின் மீதான தேவை அதிகரித்து உள்ள நிலையில் நான்காம் முறையாகச் சவரன் தங்கப் பத்திர திட்டம் ஜூலை 18 முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.
சவரன் தங்கம் பத்திரங்கள் என்பது இந்திய அரசால், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கீழ் வழங்கும் அரசாங்க தங்க முதலீட்டு பத்திரமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் தங்கத்தை நேரடியாக வாங்குவதைப் போலவே கிராம் கணக்கில் பத்திரங்களாக வாங்கலாம்.
விண்ணப்ப விநியோகம்
நிதி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியீடுள்ள அறிக்கையில் தங்க பத்திரத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 18, 2016 முதல் ஜூலை 22, 2016 முதல் பெறப்படும். பத்திரங்கள் ஆகஸ்ட் 5, 2016 அன்று விநியோகிக்கப்படும்.
எங்கு வாங்கலாம்?
இந்தப் பத்திரங்கள் வங்கிகள், இந்திய பங்கு விற்பனை ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), நியமிக்கப்பட்ட தபால் அலுவலகங்கள், தேசிய பங்குச் சந்தை (NSE), மும்பை பங்குச் சந்தை (BSE) உள்ளிட்ட இடங்களில் விற்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை விற்கப்பட்ட தங்க பத்திரங்கள்
இந்திய அரசு முதல் முறையாகச் சவரன் தங்கப் பத்திர திட்டத்தை 2015, நவம்பர் மாதம் வெளியிட்டு ரூ.246 கோடிக்கு 915.95 கிலோ தங்க பத்திரத்தை விற்றது. பின்னர் ஜனவரி மாதம் வெளியிட்ட தங்க பத்திரம் மூலமாக ரூ.798 கோடிக்கு 3,071 கிலோ தங்கத்தை விற்றது குறிப்பிடத்தக்கது.
5 கிராம் முதல் 100 கிராம்கள் வரை
இந்தத் திட்டத்தின் கீழ், தங்கப் பத்திரங்கள் 5 கிராம்கள், 10 கிராம்கள், 50 கிராம்கள், 100 கிராம்கள் என 5 முதல் 7 வருடங்களுக்கு முதலீடு செய்பவர்களுக்கு தங்கத்தின் மீது வட்டியும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். ஒரு நபர் வருடத்திற்கு அதிகபட்சமாக 500 கிராம்கள் தங்கம் வரை வாங்கலாம்.
தங்கம் இறக்குமதி
இந்தியாவின் இறக்குமதி மதிப்பில் முதலாவதாக உள்ள கச்சா எண்ணெய்க்கு அடுத்த படியாக தங்கம் இறக்குமதி செய்வதே இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. வருடத்திற்கு 1,000 டன்கள் வரை இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.
டிமேட் முறையில் வாங்குவதை ஊக்குவித்தல்
நேரடி தங்கத்தின் மீதான தேவையை குறைப்பது மற்றும் பொருட்களை டிமேட் முறையில் வாங்குவதை ஊக்குவிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடியால் நவம்பர் 5, 2015 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.