மும்பை: பாங்க் ஆஃப் பரோடா தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு வணிக வங்கிகளின் விதிகளை மீறி நாணய மற்றும் நிதி பரிமாற்றம் செய்துள்ளது என மார்ச் மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதன் விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் ரிசர்வ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மீது 5 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளது.
ரூ.6,000 கோடி நிதி பரிமாற்றம்
மார்ச் 2016ஆம் ஆண்டுச் சிபிஐ பதிவு செய்த வழக்கில், பாங்க் ஆஃப் பரோடா வணிக வங்கிகளின் விதிகளை மீறி வெளிநாடுகளில் இருக்கும் வங்கி கணக்குகளுக்கு முறைகேடாக நிதி பரிமாற்றம் மற்றும் நாணய பரிமாற்றம் செய்துள்ளது. இத்தகைய பரிமாற்றத்தில் சுமார் 6,000 கோடி ரூபாய் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது.
இக்குற்றத்தில் இவ்வங்கி ஊழியர்களும் ஈடுபட்டு இருப்பதாகவும், பல ஊழியர்களிடம் நேரடி விசாரணை செய்தது சிபிஐ.
59 கணக்குகள்
வெளிநாடுகளில் இருக்கும் 59 கணக்குகளுக்கு இத்தகைய முறைகேடான பரிமாற்றத்தை இவ்வங்கி செய்துள்ளது. இதில் பெரும்பாலான கணக்குகள் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தது.
அதிலும் முக்கியமானவை முறைகேடாகப் பரிமாற்றம் செய்யப்பட்ட நிதிபரிமாற்றம் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டதிற்காக அனுப்பட்ட பணம் எனச் சிபிஐ கண்டறிந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
சிபிஐ விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், பணச் சலவை குற்றங்களைத் தடுக்க ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளின் நிதி பரிமாற்றம், குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட FIU, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் UCICகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்த திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுத்துறை வங்கிகளில் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்த உள்ளது.
சோதனை
இந்த முறைகேடான பரிமாற்றங்கள் குறித்துப் பாங்க் ஆஃப் பரோடாவின் முக்கியக் கிளைகள் மற்றும் தலைமையகத்தைச் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் ஹாங்காங் கணக்கிற்கு அனுப்பட்ட அனைத்துப் பரிமாற்றமும் 1,00,000 டாலருக்குக் குறைவாக உள்ளது.
பங்குச்சந்தை
பாங்க் ஆஃப் பரோடா மும்பை பங்குச்சந்தைக்கு இதுகுறித்த சமர்ப்பித்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி மற்றும் புலனாய்வு அமைப்புகள் வங்கி பரிமாற்றங்களைச் சோதனையிட அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பங்கு மதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் பாங்க் ஆஃப் பரோடாவின் பங்கு மதிப்பு 2.90 புள்ளிகள் உயர்ந்து 153.65 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.