சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் யூனிட்-1-ஐ பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் இணைந்து வீடியோ கான்ஃப்ரன்ஸிங் முறையில் புதன்கிழமை மாலை 3.30 மணிக்குத் துவக்கி வைத்தனர்.
மூவர்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து விளாதிமிர் பூடின், இந்திய தலைநகர் டெல்லியில் இருந்த பிரதமர் மோடி, சென்னையில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா, கூடங்குளம் அணுமின் நிலையம் என நான்கு இடங்களில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்புச் செய்து காணொலிகாட்சி மூலம் திறக்கப்பட்டது.
1988
ரஷ்ய ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டில் கூடங்குளம் பகுதியில் அணு உலை அமைக்க 1988 நவம்பர் 20 ம் தேதி, அப்போதைய பிரதமரான ராஜீவ்காந்தி, ரஷ்ய அதிபர் கோர்ப்பச்சேவ் ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
கிடப்பில்
இருநாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு அரசியல் காரணங்களால் இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படாமல் வழக்கம்போல் கிடப்பில் போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1998 ஜூன் 21 ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், இந்த அணு உலையில் இருந்து 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இழுபறி..
இந்தத் திட்டமானது 2008 ல் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இந்த அணு மின் திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்களின் கடுமையான எதிர்ப்பால் இந்தத் திட்டத்துக்கான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
பிரச்சனை
2012, மார்ச் 31-ம் தேதி அன்று தொடங்கிய கூடங்குளம் அணுமின் நிலையம் பணிகள் மீனவர்கள் எதிர்ப்பு மற்றும் பல காரணங்களுக்காகப் பணிகள் தாமதமாகவே நடந்து வந்தது.
இப்போது அனைத்துப் பணிகளும் முடிவுற்று மின் உற்பத்தியைத் துவக்கிய நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா நடைபெற்று உள்ளது.
யூனிட் 1
2013, அக்டோபர் 2013 முதல் சதர்ன் பவர் கிரிட் உடன் ஒருங்கிணைக்கப்பட்டு யூனிட் 1 பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
யூனிட் ஒன்று மற்றும் இரண்டிற்குச் சேர்த்து முதலில் 13,171 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவே பின்னர் ரூ.17.270 கோடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் இரண்டு யூனிட்களுக்கும் சேர்த்து ரஷ்யா 6,416 கோடி ரூபாய் அளித்தது குறிப்பிடத்தக்கது.
அடிகல்
2016, ஃபிப்ரவரி 17 முதல் யூனிட் 3 மற்றும் 4-க்கான அடிகல் நாட்டப்பட்டுப் பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு யூனிட்களுக்கும் ஆபரேட்டர்கள் மற்றும் சப்ளையர்கள் தேவைகளுக்கிணங்க காப்பீட்டையும் சேர்த்து 39,747 கோடி ரூபாய்த் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
இது யூனிட் 1 மற்றும் 2-ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஒதுக்கீடு
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து முழுமையாக மின் உற்பத்தியைத் துவங்கும் போது தமிழகத்திற்கு 925 மெகா வாட் மின்சாரம் வழங்கப்படும் என்று 2013, ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்திய அரசாங்கம் ஒதுக்கியது.
இதனுடன் , கர்நாடகாவிற்கு 442 மெகா வாட்சும், கேரளாவிற்கு 266 மெகா வாட்சும், புதுச்சேரிக்கு 67 மெகா வாட்சும், பிற பயன்களுக்கு 300 மெகா வாட் என 2000 மெகா வாட் வர் வழங்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .
4 அணுமின் நிலையம்
இதனுடன் சேர்த்து 4 அணுமின் நிலையங்கள் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டணியில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.